மகா.வில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவே சிவசேனாவுக்கு குறைவான நேரம் ஒதுக்கீடு - சஞ்சய் ராவத்
அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் கூறியதாவது:
மகாரஷ்டிராவின் தற்போதைய நிலைக்கு பாஜகவின் பிடிவாதம்தான் காரணம். மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க பாஜக மறுத்திருப்பது வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயலாகும்.
தேர்தலுக்கு முன்னர் சமமான அதிகாரப் பகிர்வை ஒப்புக் கொண்டது பாஜக. ஆனால் இப்போது கூட்டணியை மதிக்காமல் அதிகாரப் பகிர்வை ஏற்க மறுக்கிறது பாஜக.
சிவசேனாவால் நிலையான ஒரு ஆட்சியை தர முடியும். பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து 72 மணிநேர கால அவகாசம் கொடுத்தார் ஆளுநர் கோஷ்யாரி.
ஆனால் சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து குறைவான நேரம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்படி குறைவான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.