எங்களுக்குதான் முதல்வர் பதவி.. பாஜக ஆதரவு இல்லாமலும் ஆட்சி அமைக்க முடியும்: சிவசேனா மிரட்டல்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்; பாஜக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கவும் முடியும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவின் சமமான அதிகாரப் பகிர்வு நிபந்தனைகளால் புதிய ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. 105 இடங்களில் வென்ற பாஜகவுக்கு ஆட்சி அமைக்க மேலும் 41 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சுயேட்சைகள் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களைக் கொண்டு பாஜக ஆட்சி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர் கோஷரியாலை நேற்று சிவசேனா, பாஜக தலைவர்கள் தனித்தனியே சந்தித்தனர். இச்சந்திப்புகளில் அரசியல் பேசவில்லை என இருதரப்பும் கூறியுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராதவ் சந்தித்தார்.
தீப்பொறி கிளப்பிய 75 நாள்.. காமராஜரே வந்தும் கூட கைவிடாத தீரம்.. அதனால்தான் அவர் சங்கரலிங்கனார்!
சரத்பவாருடன் சந்திப்பு
அவரும் இச்சந்திப்பு மரியாதை நிமித்தனமானது; தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தோம் என்று மட்டும் கூறினார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கே முதல்வர் பதவி
சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சிவசேனாவில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவை பாஜக இல்லாமலேயே பெறவும் முடியும்.
சமமான அதிகாரப் பகிர்வு
மகாராஷ்டிராவில் சமமான அதிகாரப் பகிர்வு கொண்ட அரசு அமைப்பது என்பதை தேர்தலுக்கு முன்பே பேசி முடித்துவிட்ட ஒன்று. அதனடிப்படையில்தான் புதிய அரசும் அமைய வேண்டும்.
வியாபாரிகளா?
மகாராஷ்டிரா மக்களும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். பாஜக முன்வைக்கும் அமைச்சர்கள் பதவி சலுகைகளைப் பெற எங்கள் தலைவர்களும் தொண்டர்களும் வியாபாரிகள் அல்ல.
சுழற்சி முறையில் முதல்வர் பதவி
சுழற்சி முறையிலான முதல்வர் பதவி என்பதை பாஜக தலைவர் அமித்ஷாவும் தேவேந்திர பட்னாவிஸும் முந்தைய பேச்சுவார்த்தைகளின் போது ஏற்றுக்கொண்டதுதான். ஆகையால் எங்களுடைய நிபந்தனைகளில் நாங்கள் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவது இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.