தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு? குண்டு துளைக்காத ரோல்ஸ் ராய்ஸ் கார்! யார் இந்த "மகாதேவ்" சந்திரகர்?
மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி உள்ளிட்ட 22 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் அந்த செயலியை உருவாக்கியவர்கள் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கும் தொடர்பிருப்பதாக அமலாக்கத் துறை விசாரணையில் தகவல்கள் கிடைத்தன.
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான செயலி மகாதேவ் ஆகும். இது ஒரு சூதாட்ட செயலி. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த செயலியை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த செயலியை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சரவுரப் சந்திரகர், அவருடைய நண்பர் ரவி உப்பால் ஆகியோர் உருவாக்கினர். ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருகிறது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்த போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டார்.
இதையடுத்து அவர் நண்பர் உப்பாலுடன் தப்பி துபாய் சென்று அங்கிருந்த படியே சூதாட்ட செயலியை உருவாக்கி அதை இந்தியாவில் அறிமுகம் செய்தது தெரியவந்தது. இந்த மோசடி புகார் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையில் ரூ 417 கோடி முடக்கப்பட்டுள்ளது.
ரூ 5 ஆயிரம் கோடிக்கு பண மோசடி நடந்ததாக தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் ரூ 200 கோடி செலவு செய்து தனது திருமணத்தை சவுரப் சந்திரகர் நடத்தியுள்ளார். இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனி விமானத்தில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த திருமணத்திற்கு துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில் நடிகர்களுக்கு தலா ரூ 40 கோடி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அது போல் பெரிய அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகளுக்கும் பணம் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாதேவ் செயலியின் கீழ் சட்டவிரோதமாக 60 க்கும் மேற்பட்ட விளையாட்டு செயலிகளை நடத்தி வருவது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. பாகிஸ்தானில் கூட காஸ்கர் என்பவர் மூலம் இவர்கள் சூதாட்ட செயலியை தொடங்கியுள்ளனர். காஸ்கரின் உதவியுடன் சந்திரகரை சுற்றி எப்போதும் 20 முதல் 30 பவுன்சர்கள் இருப்பார்கள். சந்திரகரிடம் 4 முதல் 5 சொகுசு கார்கள் உள்ளன. அவற்றை கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த பாதுகாப்புடன் வலம் வருகிறாராம். மேலும் சந்திரகர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு துப்பாக்கி குண்டு துளைக்காத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய புலனாய்வு அமைப்புகள் தன்னை விசாரிப்பது தெரிந்ததும் சந்திரகர் செல்லும் முக்கிய விசேஷங்கள், கூட்டங்கள் அவர் வருவதற்கு முன்பே தீவிர கண்காணிப்பு செய்யப்படும். KHELOYAR என்ற சூதாட்ட செயலிதான் பாகிஸ்தானில் அதிக லாபம் ஈட்டி வருகிறது. இந்த செயலியை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த காஸ்கர் என்பவர் சந்திரகர், உப்பாலுடன் இணைந்து நடத்தி வருகிறார். காஸ்கருக்கு 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட் கொடுத்துள்ளது. அவருக்கு துபாயில் குடியிருப்பு விசாவும் உள்ளது.
காஸ்கர் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரர் என சொல்லப்படுகிறது. 1986ஆம் ஆண்டு காஸ்கர் தனது குடும்ப உறுப்பினர்கள், தாவூத் இப்ராஹிமுடன் துபாய் சென்றார். அது நாள் முதல் காஸ்கர் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலேயே சுற்றி வருகிறார். தாவுத் இப்ராஹிமுக்கு 6 சகோதரர்கள். அவர்களில் நூரா, ஹுமாயுன், சபீர் ஆகியோர் இறந்துவிட்டனர். மற்ற 3 சகோதரர்களான அனீஸ், இக்பால், காஸ்கர் ஆகியோர் உயிருடன் உள்ளனர்.
இக்பால் இந்தியாவிலும் காஸ்கர் மற்றும் அனீஸ் கராச்சியில் தாவுத் இப்ராஹிமுடன் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. சந்திரகர், உப்பாலுக்கு சவுதியில் காஸ்கர் ஒரு வில்லாவை பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மகாதேவ் செயலி இந்தியாவில் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருவதால் ஐக்கிய அரபு நாடுகளில் காஸ்கருடன் தொடர்பில் உள்ள செல்வாக்குமிக்க நபர்களுடன் சந்திரகருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்கள்தான சந்திரகரை காஸ்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இந்த செயலி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி அவர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகல், மகாதேவ் செயலி நிறுவனத்திடம் இருந்து ரூ 508 கோடி பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத் துறையின் பரிந்துரையின்படி மகாதேவ் மற்றும் ரெட்டியன்னா பிரெஸ்டோப்ரா உள்ளிட்ட 22 சட்டவிரோத பந்தய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications