இந்தியா வந்த முகேஷ் அம்பானி ட்வின்ஸ் பேரக் குழந்தைகள்.. ராஜ உபசாரம்.. ஆமா அது என்ன 300 கிலோ தங்கம்?
மும்பை: கூகுளில் தற்போது 300 கிலோ தங்கத்தின் விலை என்ன என்று இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் அதிகளவில் தேடி வருகின்றனர். இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் அவரது கணவரும் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியர்கள் ஏன் இவ்வாறு கூகுளில் தேடுகிறார்கள் என்று பார்ப்போம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் பிரபல தொழில் நிறுவனமான பிரமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமலுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஏராளமான அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.
இனி இந்த நாட்டிற்கு விசா இன்றி பயணிக்க முடியாது.. இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு
இரட்டை குழந்தைகள்
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் தம்பதிக்கு அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெண் குழந்தைக்கு ஆதியா எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் தம்பதி அமெரிக்காவில் இருந்து தங்கள் இரட்டை குழந்தைகளுடன் 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.
இந்தியாவில் உற்சாக வரவேற்பு
மும்பை விமான நிலையத்திற்கு வந்த அவர்களையும், இரட்டை குழந்தைகளையும் முகேஷ் அம்பானி நேரில் சென்று வரவேற்றார். அவருடன் அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் உடன் இருந்தார். தனது மகளையும், பேரக்குழந்தைகளையும் முகேஷ் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
வீட்டில் பிரம்மாண்ட ஏற்பாடு
அதில் ஒரு குழந்தை முகேஷ் அம்பானியின் கையிலும் மற்றொரு குழந்தை நீடா அம்பானியின் கையிலும் இருந்தது. இதனை தொடர்ந்து வோர்லி பகுதியில் உள்ள கருணா சிந்து என்ற இஷா அம்பானியின் வீட்டுக்கு இரட்டை குழந்தைகள் கொண்டு செல்லப்பட்டன. அம்பானி, பிரமல் ஆகிய இரு பெரும் குடும்பங்களின் இரட்டை வாரிசுகளை வரவேற்க வீட்டில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சிறப்பு BMW கார்
குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதேபோல் குழந்தைகளுக்கான சிறப்பு அறைகலன்களும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் இந்த குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதற்காகவே சிறப்பாக BMW கார் ஒன்றை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.
பிரம்மாண்ட விருந்து
இரட்டை குழந்தைகள் பிறந்து இந்தியாவுக்கு வந்ததை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய விருந்து அளிக்கப்போவதாகவும் இதற்காக உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களை அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி நாம் இப்போது விசயத்துக்கு வருவோம். ஏன் இணையதளங்களில் நெட்டிசன்கள் இந்தியாவில் 300 கிலோ தங்கத்தின் விலை என்ன என்று தேடுகிறார்கள் தெரியுமா?
300 கிலோ தங்கத்தின் ரகசியம்
அத்துடன் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களான திருப்பதி, நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயில், துவர்கதிஷ் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இருந்து சிறப்பு பிரசாதங்கள் கொண்டு வரப்படுவதாகவும், கோயில் அர்ச்சகர்களுக்கு மட்டும் 300 கிலோ தங்கத்தை அன்பளிப்பதாக அம்பானி குடும்பம் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மளைத்துப்போன நெட்டிசன்கள் இதன் விலையை தேடி உள்ளார்கள்.
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலையை வைத்து கணக்கிட்டால் இது ரூ.152.58 கோடியை தொடுகிறது.