சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள கிராமம் சுளவாடி. இங்குள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது.
இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில் பூஜைகள் முடிவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களை ஊர் கமிட்டியினர் அழைத்து வந்து பூஜையில் பங்கேற்க செய்தனர்.
இதன்பிறகு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆனால் இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பிற மக்கள், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கொள்ளேகால் தாலுகா அரசு மருத்துவமனை, மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக சிலர் மைசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதில் 5 பேரும், மைசூர் மருத்துவமனையில் 2 பேரும் பலியாகியுள்ளனர். பிரசாதத்தில் கிராமத்தை சேர்ந்த எதிர்கோஷ்டி விஷம் கலந்திருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், பிரசாதம் சாப்பிட்டவர்கள், கிட்னி, மூளை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சுமார் 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிடுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளேகால் அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.