Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஷாட மாத கடைசி வெள்ளி.. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

மைசூர்: கர்நாடகாவில் ஆஷாட மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைசூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ஹெலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மைசூர் சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மாவட்டம் இன்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதை என்ற சாமுண்டீஸ்வரி தான் காரணம் என்கின்றன புராணங்கள்.

Ashada last Friday thousands of devotees visit Chamundi Hill Chamudeeswari

மைசூர் மாநகரில் கால்பதிக்கும் ஒவ்வொருவரும் முதலில் கைகூப்பி வணங்குவது சாமுண்டீஸ்வரிதேவி குடி கொண்டிருக்கும் சாமுண்டிமலையை நோக்கிதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 486 அடி உயரத்தில் செங்குத்தாக காணப்படும் சாமுண்டிமலை தேவி குடி கொண்டிருக்கும் கோயிலாகவுள்ளது.

மைசூர் நகரத்தை காண வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாராக இருந்தாலும், முதலில் சாமுண்டீஸ்வரி தேவியின் தரிசனம் பெற்றபின்தான் பிற சுற்றுலாதலங்களை கண்டு ரசிப்பார்கள். மைசூர் மாநகரம் ஆதி, மத்திய, அந்தியா என்ற முப்பெயரில் அழைக்கப்படுகிறது. கண்நோக்கி பார்க்கும் போது முதலில் தெரிவது சாமுண்டிமலை மட்டுமே.

அதன் எழிலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மேலே சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க தோன்றும். மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறார். கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்திசிலையும், எதிர் வரிசையில் மஹிசாசுரன் சிலையும் வரவேற்கும். கஷ்டத்தோடு வரும் பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறார்.

மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை கர்நாடக மண்ணை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை. மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்ற பெயரில் இருந்தது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனின் தவத்திற்குமெச்சிய சிவன், நேரில் வந்து காட்சி கொடுத்ததுடன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். சிவனை அடிபணிந்த மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அவனின் வேண்டுதலை ஏற்று சாகாவரத்தை சிவன் வழங்கினார்.

சிவனிடம் வரம் பெற்றம ஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையை தாங்க முடியாமல், மக்கள் தேவர்களிடம் முறையிட்டனர். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சிவனிடம் சென்ற தேவர்கள், நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். அவனுக்கு கொடுத்த வரத்தை திரும்ப பெறுங்கள் அல்லது அவனை அழிக்க மாற்று வழி சொல்லுங்கள் என்று முறையிட்டனர்.

தேவர்களிடம் பேசிய சிவபெருமான், நான் வரம் கொடுக்க மட்டுமே பிறந்தவன். கொடுத்தவரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதே சமயம் என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.

அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும் என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண்பக்தர்கள் பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்க தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரனின் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் பிறந்தாள்.

மஹிஷாசூரன் வதம் : சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள். சாமுண்டீஸ்வரி தேவியை யதுகுலத்தை சேர்ந்த உடையார் பேரரசர்கள் தங்கள் குலதெய்வமாக போன்றி வணங்கி வருகிறார்கள். சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலம் வரை மன்னர் குடும்பத்தின் குல தெய்வமாக தேவி திகழ்கிறார். அந்த குடும்பத்தை மட்டுமில்லாமல், மாநிலத்தையும் ஆசீர்வதித்து வருகிறாள்.

வெள்ளிக்கிழமை: ஆஷாட மாதத்தில் அம்மன் பிறந்தநாள் என்பதால் வெள்ளிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஆஷாட் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சாமுண்டீஸ்வரியை தரிசிக்க அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்தனர். இதில் மத்திய அமைச்சர் ஷோபா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ஆகியோர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கன்னட ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் சாமுண்டி மலைக்கு வாகனங்களில் செல்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தவர்களுக்கு லலிதா பேலஸ் மகால் பின்புறம் உள்ள மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கிருந்து அரசு பஸ் மூலம் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர். மைசூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ஹெலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+