அயோத்தி ராமர் சிலைக்கு கல் எடுத்த கிராமத்திற்கு சென்ற பாஜக எம்.பி.. மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு
மைசூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால ரமர் சிலைக்கு கற்கள் எடுக்கப்பட்ட கிராமத்திற்கு சென்ற பாஜக எம்.பியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றார்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளாக இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதல் தளத்தின் பணிகள் முழுவதுமாக நடந்து முடிந்துள்ளது. கோயிலின் முதல் தளத்தில் பாலராமருக்கு சிலை வைக்கப்படுள்ளது. இன்று ராமர் கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிராண பிரதிஷ்டை சடங்குகள் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று இந்த சடங்குகளை செய்து வைத்தார். கோயில் கருவறையில் கடந்த 18 ஆம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை மேற்கொண்டார்.
பாஜக எம்பியை முற்றுகையிட்டனர்: இதையடுத்து பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவான இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளதால் அயோத்தி மட்டும் இன்றி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உற்சாகம் கரைபுரண்டது.
அயோத்தி கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலைக்கு தேவையான கற்கள் மைசூர் அருகே உள்ள குஜ்ஜேகவுடனபுரா கிராமத்திலிருந்து எடுக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருந்த நிலையில், மைசூரு-குடகு தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா குஜ்ஜேகவுடனபுரா கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டார். இதன்படி கிராமத்திற்கு அவர் செல்ல முயன்ற போது கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜக எம்.பியை முற்றுகையிட்டனர்.
இழிவாக பேசினார்: எங்களை இத்தனை ஆண்டுகளாக புறக்கணித்ததாகவும் கிராமத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்திற்குள் நுழைய விடாமல் பாஜக எம்.பியை மக்கள் விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிரதாப் சிம்ஹா, கடந்த 2014 அம் ஆண்டு முதல் மைசூரு - குடகு தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவர் தலித்துகள் குறித்து இழிவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது.












Click it and Unblock the Notifications