காவிரி: தமிழ்நாட்டுக்கு எதிராக நடிகர் நடிகைகளை இழுத்துவிடும் கன்னட விவசாயிகள்- போர்க்களமான மாண்டியா!
மைசூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவின் மாண்டியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்காக போராட நடிகர் ,நடிகைகள் களமிறங்கிவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கன்னட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கருகும் குறுவை பயிர்கள்:காவிரி மேலாண்மை ஆணையமும் 2 முறை காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டது. கர்நாடகாவோ, காவிரி நீரை திறக்கிறோம் என்ற பெயரில் குறைவான நீரையே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி காய்ந்து கொண்டிருக்கிறது.
டெல்லியில் டேரா: மேலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பிக்களை அழைத்துக் கொண்டு காவிரி பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகா மனு: அத்துடன் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை கேட்டும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

தொடரும் மாண்டியா போராட்டம்: இதுஒருபுறம் இருக்க, கர்நாடகாவின் மாண்டியாவில் கன்னட விவசாயிகள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மாண்டியா (மண்டியா) மாவட்டம் போர்க்களமாக இருக்கிறது. மண்டியா விஸ்வரேஸ்வரய்யா சர்க்கிள் பகுதியில் திரண்ட கன்னட விவசாயிகள் நேற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். காவிரி ஆற்றில் குதித்து அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினர். மண்டியா ஶ்ரீ நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அறக்கட்டளையினரும் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மைசூரு- பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.
ரகசியமாக நீர் திறப்பு: மாண்டியா, ஜெயசாமராஜேந்திர உடையார் சர்க்கிள் பகுதியை முற்றுகையிட்ட இன்னொரு தரப்பு கன்னட விவசாயிகள் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கன்னட விவசாயிகள் முழக்கமிட்டனர். கர்நாடகாவில் வறட்சி நிலவும் நிலையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு ரகசியமாக காவிரி நீரை திறந்துவிட்டது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கன்னட நடிகர், நடிகைகளுக்கு எச்சரிக்கை: இந்த பிரச்சனையில் கர்நாடகாவுக்காக கன்னட நடிகர், நடிகைகள் என திரை உலகம் வாய்மூடி மவுனியாக இருப்பதை ஏற்க முடியாது; காவிரி பிரச்சனைக்கான போராட்டத்தில் கன்னட திரை உலகம் அமைதி காக்காமல் களத்தில் இறங்க வேண்டும்; இல்லை எனில் கன்னட நடிகர்- நடிகைகளுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தும் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications