"பேங்க் மேனேஜரை மாற்றாதீங்க".. ஒரு ஊழியருக்காக திரண்டு வந்த ஊர்.. நாகையில் நெகிழ்ச்சி சம்பவம்.. ஏன்?
நாகை : நாகை மாவட்டம், ஆயக்காரன்புலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மற்றும் பணியாளரை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பொதுத்துறை வங்கிகளில் வட இந்தியர்களே மேலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியில் உள்ளனர். மேலும், இவர்கள் இந்தி மொழியை அதிகம் பேசுவதால், வங்கிக்கு வரும் கிராமப்புற மக்கள், மொழிப் பிரச்னையால், தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை தெரிவிப்பதில் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அடங்கேப்பா! சிபிஐ ரெய்டில் ஹெலிகாப்டர் பறிமுதல்.. ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் அதிரடி
இடமாற்றம் - நெகிழ்ச்சி போராட்டங்கள்
பொதுவாக பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் திடீரென இடமாற்றம் செய்யும்போது, அப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதும், இதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவதும் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், நாகை மாவட்டம், ஆயக்காரன்புலத்தில் வங்கி மேலாளர் மற்றும் பணியாளரை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயக்காரன்புலம் வங்கி அதிகாரிகள்
இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் வங்கியின் மேலாளராக செந்தில்குமார், காசாளராக சந்திரலேகா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் கணிவுடன் பேசி வருவதோடு, எந்தவித பாகுபாடு இன்றி நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கல்வி கடன், நகை கடன், விவசாய கடன் வழங்குதல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான வங்கியின் சார்பில் கிடைக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் பொதுமக்களை சென்றடையும் வகையில் பணியாற்றி வந்துள்ளனர். மேலும், மேலாளர் மற்றும் காசாளர் இருவரும் தமிழர் என்பதால் இங்கு கணக்கு வைத்திருக்கும் கிராமப்புற மக்களுக்கு பணம் எடுக்க மற்றும் செலுத்த எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.
வங்கி அதிகாரிகள் இடமாற்றம் - போராட்டம்
இந்நிலையில், வங்கியின் மேலாளர் செந்தில்குமாா், காசாளர் சந்திரலேகா ஆகியோர் வேறு கிளைக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டால் தங்களுக்கு சிரமம் ஏற்படும் எனக் கூறி, ஆயக்காரன்புலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் வாடிக்கையளர், மகளிர் குழுவினர், வணிகர்கள், ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இவா்களிடம் அந்த வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை வங்கியின் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
நாகை மாவட்டம், ஆயக்காரன்புலத்தில் வங்கியின் மேலாளர் மற்றும் பணியாளர்களை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது, பல்வேறு தரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.