வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் - சீர்காழியில் அதிர்ச்சி
நாகப்பட்டினம்: சீர்காழியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் காலை நேரத்தில் வீட்டு வாசலில் கோலம்போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் தலையில் அடித்து கொலை செய்து விட்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர். அதிகாலையில் அந்த பெண் போட்ட அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினரை கூட எட்டாமல் அடங்கிப்போனது என்பதுதான் சோகம்.
கொலையான பெண்ணின் பெயர் சித்ரா,49 இவர் நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி திருவள்ளுவர் நகர் 2வது தெருவில் வசிப்பவர் ஓதவந்தான்குடி ஊராட்சி ஒன்றிய அரசுபள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி என்பவரின் மனைவியாவார்.

வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்த சித்ராவின் தலையில் பலமாக எதுவோ தாக்கியது அலறிக்கொண்டே கீழே விழுந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சித்ராவின் தலையில் அடித்த மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர் சித்ராவின் அலறல் சத்தம் யாருக்குமே கேட்காமல் போய்விட்டது. அவர் வீட்டு வாசலியே கிடந்துள்ளார்.
அருகில் வசிக்கும் பெண் எழுந்து வந்து வெளியே பார்த்தபோது சித்ரா ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போடவே, அவரது அலறல் சத்தம் கேட்டு ஆனந்தஜோதியின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போதுதான் சித்ராவிற்கு நிகழ்ந்த கொடூரம் தெரியவந்தது. சித்ராவின் கணவரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி டி.எஸ்.பி யுவப்பிரியா தலைமையிலான காவல்துறையினர் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications