மீண்டும் மீண்டுமா? நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்
நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையே நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் இயக்க முடியவில்லை என்று தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. 'செரியபாணி' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் இலங்கைக்கு சென்று வந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கப்பல் சேவையை தொடங்க பயணிகள் பலர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆர்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென கப்பல் சேவை வரும் 17ஆம் தேதிக்கு (நேற்று) மாற்றப்படுவதாக கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இலங்கை செல்ல 150க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 19ஆம் தேதியில் (நாளை) இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில சட்டரீதியான அனுமதி கிடைக்காத காரணத்தால் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அந்த கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை பயணச்சீட்டை பெற்றவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும் என்றும், அதன் காரணமாகவே கப்பல் சேவை தேதி குறிப்பிடாமல் தற்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications