சாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.
நாகை: சிறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகளை விடுவிக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின.
சாதி, மத, பேதங்களை கடந்து இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் பதாகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்த போது,
10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு கருணைக் காட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதில் எந்த பாகுபாடுகளையும் காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஆயுள் சிறைக்கைதிகளை விடுவிப்பதில் மதமாச்சரியங்களை கடந்து அரசும், சிறைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களின் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே தமிழகம் முழுக்க சமூக இடைவெளியுடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு மதங்களை கடந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications