தங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்
நாகர்கோவில்: கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் போட்டோ ஸ்டூடியோ ஓனரை கொன்று எரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கை உடனான கள்ளக்காதலை விட மறுத்த காரணத்தால் அந்த நபரை கொன்றதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
செவ்வாய்கிழமையன்று நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் உள்ள கரியமாணிக்கபுரத்தில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் உதவி எஸ்பி கோட்டார் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அந்த சுடுகாட்டிற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட நபருக்கு 30 வயதிருக்கலாம் வேறு எங்கேயோ கொன்று சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்துள்ளனர். அந்த சடலம் யாருடையது, கொலைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

காரை வைத்து கண்டுபிடித்த போலீஸ்
கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாயமானவர்களை ஒரு தனிப்படை போலீசார் தேடிய நிலையில், மற்றொரு பிரிவு போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் சம்பவம் நடந்த நேரத்தில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து போன மர்மகாரை கண்டுபிடித்து விசாரணையை தொடங்கினர்.

போட்டோ ஸ்டூடியோ ஓனர்
அந்த கார் வள்ளியூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் ரெசி என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள நண்பர்களைப் பார்க்கப் போன ரெசியை இரண்டு தினங்களாக காணவில்லை என்றும் கூறினர். இதனையடுத்து ரெசியின் நண்பர்கள் பக்கம் போலீசின் பார்வை திரும்பியது.

கொன்று எரித்த நண்பன்
ரெசியின் நண்பர் பெயர் கேத்தீஸ்வரன் என்று தெரியவந்தது. அவர் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் என்றும் விசாரணையில் தெரியவரவே, போலீசார், கேத்தீஸ்வரனை அள்ளி வந்தனர். அவர்களுக்கு அதிகம் வேலை வைக்காத அவர், ரெசியை கொன்றது தான்தான் என்று அடிக்காமலேயே ஒப்புக்கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கொலைக்கான காரணத்தையும் கூறினார்.

கள்ளக்காதலை விடாத நண்பன்
ரெசியும் இலங்கை தமிழர் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரெசி பின்னர் வள்ளியூரில் ஸ்டூடியோ தொடங்கினார். அவ்வப்போது கேத்தீஸ்வரன் வீட்டிற்கும் வந்து செல்வராம். இதில்தான் கேத்தீஸ்வரன் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. ரெசி தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.

கொன்று எரித்தோம்
எனது தங்கையுடன் கள்ளக்காதலை தொடர்ந்தார் ரெசி, எனக்கு தெரியாமல் பல இடங்களில் சந்தித்தனர். ஊரில் பேச்சு வரவே அசிங்கப்பட்டேன். இருவரையும் எச்சரித்தும் விடாமல் தொடர்ந்தனர். இதனால் ரெசியை கொல்ல முடிவு செய்தேன். ரம்ஜான் அன்று நாகர்கோவில் வரவழைத்து மது குடித்தோம். தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் காரிலேயே வைத்து கத்தியால் குத்தினேன். சடலத்தை எரிக்க முடிவு செய்தேன்.

மூன்று பேர் கைது
உதவிக்கு நண்பர்கள் இருவரை அழைத்தேன். சுசீந்திரத்தைச் சேர்ந்த பழனி, கன்னியாகுமரியைச் சேர்ந்த பைசல் உதவியுடன் கரியமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரித்தோம். சடலம் பாதி எரியாமல் காட்டிக்கொடுத்து விட்டது. போலீசார் கைது செய்து விட்டனர் என்றார். கேத்தீஸ்வரனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை எரிக்க உதவியை நண்பர்களையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கள்ளக்காதலால் நடந்த கொலை வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications