நாகர்கோவிலில் காங். பாஜகவினரிடையே பயங்கர மோதல்.. மாவட்ட பாஜக தலைவர் அதிரடியாக கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்திற்குள் காங்கிரசார் நுழைய முயன்றதால், பா.ஜனதாவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரசார் போராடி வருகிறார்கள். திங்கள்கிழமை மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரசார் சிலர் பாஜக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

பாஜக காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ் கட்சியிருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் திட்டிக் கொண்ட அவர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்க தொடங்கியது தொடர்பாக வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் கட்சி கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரசார், பா.ஜனதாவினரை தாக்க, பதிலுக்கு அவர்கள் அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரசார் மீதும் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோவில் இருந்தது.

4 பேர் காயம்
இந்த களேபரத்துக்கு இடையே பாஜக அலுவலகத்தின் மீதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் காங்கிரசார் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவினர் கடும் கோபம் அடைந்து பதிலுக்கு அவர்களும் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.

ரவுடிகள்
இந்த வன்முறை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

வேண்டுகோள்
உடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பாஜக தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

கைது செய்யுங்கள்
இதற்கு பதிலடி கொடுத்த தமிழக காங்கிரஸ் கமிட்டி, "அண்ணாமலை அவர்களே, தாக்கியவர்கள் தான் காயம் அடைவார்களா? அறவழியில் போராடிய காங்கிரஸ்காரர்கள் மீது பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடந்த தாக்குதல் இந்த வீடியோவில் உள்ளது. வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ள நபர் உங்கள் மாவட்ட தலைவர் தானே? முதலில் அவரை கைது செய்ய சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தது. இதனிடையே இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நாகர்கோவில் போலீசார், கன்னியாகுமரி மாவடட பாஜக தலைவர் தர்மராஜ்யை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications