பாஜகவின் கிளைதான் அதிமுக; நம்ம உரிமையை மோடியிடம் அடகு வச்சிருக்காங்க.. தக்கலையில் பொங்கிய ஸ்டாலின்!
நாகர்கோவில்: தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பிரதமர் மோடியிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Recommended Video
அதிமுக, பாஜகவின் கிளை கழகம் போல செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டு காலத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
அனல் பறக்கும் பிரசாரம்
தமிழகத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்து தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்
மோடியிடம் அடகு வைத்த அதிமுக
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பிரதமர் மோடியிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு முன்னர், மோடியிடம் ஜிஎஸ்டி, உதய் திட்டம், நீட்தேர்வு உள்ளிட்ட திட்டங்களை ஆதரிக்க முடியாது என்று உறுதியுடன் கூறினார். ஆனால் தற்போதுள்ள அரசு பாஜகவின் மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டுள்ளது.
பாஜகவின் கிளைதான் அதிமுக
அதிமுக, பாஜகவின் கிளை கழகம் போல செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம். தலைவர் கலைஞர் ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளுவர் சிலை, நேசமணிக்கு மணி மண்டபம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது திமுக.
திமுக ஆட்சியில் திட்டங்கள்
அதிமுக ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டு காலத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. எனக்கு வரலாறு உண்டு. நான் கலைஞரின் மகன், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசமாட்டேன். பல்வேறு கொடுமைகளை, அக்கிரமங்களை செய்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. பொதுப்பணித்துறை டெண்டர் நான்காயிரம் கோடி ரூபாய் டெண்டர் எடப்பாடி சம்பந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.