செய்வினை வச்சிருக்காங்க.. யார் அந்த மந்திரவாதி.. நாகர்கோவில் எஸ்பி ஆபிசுக்கு ஓடி வந்த இளம் பெண்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண், நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில் போலி மந்திரவாதி ஒருவர், செய்வினை பாதிப்பை நீக்க நரபலி பூஜை நடத்துவதாக கூறி நகை மற்றும் ரூ.3.5 லட்சம் மோசடி செய்ததாக கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே காடஞ்சேரி பகுதியை சேர்ந்த சகாய ஜெகன் மனைவி கிளாடிஸ் அனுஜாவுக்கு 33 வயது ஆகிறது. . இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில் அனுஜாவுக்கு கூறுகையில், "எனக்கு கல்யாணமாகி கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். நான், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறேன். எனது ஊரில் இருந்து தினமும் அரசு பஸ்சில் நாகர்கோவிலுக்கு வருவேன். அப்போது பஸ்சில் என்னுடன் பயணம் செய்த கருங்கல் பாலூரை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் எனக்கு ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . பின்னர் என்னை பஸ்சில் சந்தித்த அந்த பெண், 'உனக்கு யாரோ செய்வினை வைத்துள்ளார்கள். இதனை பரிகார பூஜை செய்து சரி செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும். குடும்பத்தில் தொடர்ந்து இறப்பு நிகழும். அதங்கோடு பகுதியில் எனக்கு தெரிந்த மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் உனது பிரச்சினைகளை சரி செய்து தருகிறேன்’ என்று தெரிவித்தார்.
முதலில் நான் இதை கொஞ்சமும் நம்பவில்லை. அப்போது அவர் எனது கணவரையும் செய்வினை பாதிக்கும் என்று பயமுறுத்தினார். இதனால் நான் அவர் கூறியபடி பரிகார பூஜை செய்ய சம்மதித்தேன். முதலில் ரூ.1 லட்சம் பணமும், ஒரு பவுன் நகையும் எனனிடம் இருந்து வாங்கினார். பின்னர் நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.2.60 லட்சம் பெற்றார்.
ஆனால் அவர்கள் கூறியபடி எந்த பரிகார பூஜையும் செய்யவில்லை. மாறாக அந்த பெண்ணும், மந்திரவாதியும் சேர்ந்து என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள்.இவர்கள் மோசடி செய்வது எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தொல்லையை தாங்க முடியாமல் நான், 'எந்த பூஜையும் செய்ய தேவையில்லை’ என்று கூறினேன்.
ஆனால் அவர்கள், 'நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் ஆபத்தாகி விடும்’ என்று மிரட்டுகிறார்கள். எனவே என்னை ஏமாற்றி பணம் பறிந்த அந்த பெண் மற்றும் போலி மந்திரவாதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் என்னிடம் இருந்து வாங்கிய பணம் மற்றும் நகையை மீட்டு தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications