அதிமுக டீசர்ட் அணிந்து தவெக கொடி காட்டிய தொண்டர்! மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டாங்களே
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தவெக கொடி பறந்ததை அடுத்து, அதிமுக கூட்டணியில் விஜய் கட்சி இணையவுள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் அந்த கொடியை வைத்திருந்தவர் அதிமுக கரை கொண்ட டீசர்ட்டை அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையத்தில் அவர் நேற்றைய தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது.
அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.
கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விபட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?
41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை வலுவாக அமைப்போம் என பேசிய போது, சிலர் தவெக கொடியை உயர்த்தி கோஷமிட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக சொல்லப்பட்ட நிலையில் தவெக கொடி பறந்தது யூகங்களை ஊர்ஜிதப்படுத்தியது போல் இருந்தது.
இந்த நிலையில் அந்த தவெக கொடியை காட்டியது அதிமுக தொண்டர்தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த தொண்டர் அதிமுக கரை கொண்ட டீசர்ட் அணிந்த நபர்தான் தவெக கொடியை பறக்கவிட்டது அம்பலமாகியுள்ளது. அவர் தவெக கொடி வைத்திருந்த அதிமுக தொண்டரா, இல்லை அதிமுக டீசர்ட் அணிந்த தவெக தொண்டரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications