யாருப்பா அவரு? எடப்பாடி பழனிசாமிக்கே அதிர்ச்சி கொடுத்த கோபிநாத்.. அதிமுகவில் புது அணியா? ஆஹா!
நாமக்கல்: அதிமுக பிரமுகர் வைத்த பேனரில் இருந்த பெயர், அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளையும் போல அதிமுகவில், மகளிர் அணி, மாணவரணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மீனவரணி, விவசாயிகள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட ஏராளமான அணிகள் உள்ளன. அதோடு, அதிமுகவில் எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை ஆகிய சார்பு அணிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளின் நிர்வாகிகளுக்கும், கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புரட்சித் தமிழர் பேரவை என்ற பெயரில், நாமக்கல் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஃப்ளெக்ஸ் பேனர், அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, 'புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது. எடப்பாடிக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது அப்போதே கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், அதிமுகவின் நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் ஏராளமான பேனர்களை வழியெங்கும் வைத்திருந்தனர்.
அதில் ஒரு பேனர் தான் அதிமுகவினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் என்ற அதிமுக பிரமுகர், 'புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் அரசியல் வாரிசே, புரட்சி தமிழரே' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பேனர் வைத்திருந்தார். மேலும், அதில், புரட்சி தமிழர் பேரவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சித் தலைமையால் இதுவரை இப்படியான பெயரில் அணியே தொடங்கப்படாத நிலையில், அதிமுக நிர்வாகி இவ்வாறு பேனர் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு, எம்.ஜி.ஆர்., மன்றம், ஜெயலலிதாவுக்கு, ஜெ., பேரவை என்பது போல, பழனிசாமிக்கு, 'புரட்சி தமிழர் பேரவை’ என்ற பெயரில் புதிய அணி தொடங்கப்பட்டுள்ளதா என அதிமுகவினரே இந்த பேனரை பார்த்து குழம்பிப்போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications