முட்டைக்கு பயங்கர மவுசு.. வரலாறு காணாத அளவில் உயர்ந்த முட்டை விலை.. எவ்வளவு தெரியுமா?
நாமக்கல்: வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணையில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் இங்கு உற்பத்தி ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் சரிவு ஏற்பட்டு, இந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, ரூ. 4.75 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
இன்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, முட்டை விலை அதிகரித்துள்ளது.
முட்டை விலை உயர்வு நாளை காலை அமலுக்கு வருவதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை 5.70 ரூபாயை எட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்முதல் விலை அதிகரிப்பால், முட்டை சில்லறை விலையும் வெகுவாக உயர்கிறது. சில்லறைக் கடைகளில் முட்டை விலை ரூபாய் 6.25 காசுகள் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. பண்ணை கொள்முதல் விலை உயர்வால் மேலும் 10 காசுகள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் பரவலாக இறைச்சி நுகர்வு இந்த மாதத்தில் குறையும். மார்கழி மாதம் தொடங்கியதும் முட்டை விலை மேலும் சரிவடையும். தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் சூழலில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications