நாமக்கல் அருகே கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்சியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர், அவரது மனைவி, குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி டோல்கேட் ஷீரடிநகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). இவர் பொதுப்பணித் துறையில் பாசன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தேவிப்பிரியா (34) ன என்ற மனைவியும், சாய் கிருபா என்ற இரண்டு வயது குழந்தையும் உள்ளனர். இவரது குழந்தை சாய் கிருபாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், பெங்களூரில் உள்ள ஆயுர்வேத மருத்துமனை ஒன்றில் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இவர்களுடன் அசோக்குமார் உறவினர்கள் ராஜாமணி (65), கோமதி (60) ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்களது காரை அசோக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.

மருத்துவமனை சென்றுவிட்டு திருச்சி திரும்பியபோது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் அருகே களங்கானி ரெட்டிப்புதுாரில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அசோக்குமார், அவரது மனைவி தேவிப்பிரியா, குழந்தை சாய் கிருபா மற்றும் உறவினர்கள் ராஜாமணி, கோமதி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சாலையோரம் நின்றிருந்த லாரி ஆந்திராவில் இருந்து மதுரைக்கு பருப்பு லோடு ஏற்றி வந்துள்ளது.
அதன் ஓட்டுநர் தஸ்தகீர் ஓய்வெடுப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தி இருந்துள்ளார். விபத்து குறித்து புதுச்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications