யாரு சாமி நீ... வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க.. வங்கியிலேயே கடன் கேட்ட வேட்பாளர்.. மேனேஜர் செம ஷாக்
நாமக்கல்: சட்டசபை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வாக்களர்களுக்கு பணம் கொடுக்க வங்கிலேயே கடன் கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குக் குறைவான நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு யுக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். தோசை சுடுவது, கபடி ஆடுவது போல வித்தியாசமான முறைகளிலும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியில் மனு
இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வங்கிலேயே கடன் கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் தொகுதியில் இந்த முறை மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அமிக்சா சோஷியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுபவர் ரமேஷ். இவருக்கு கிரிக்கெட் பேட், ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலாளர் ஷாக்
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் காந்தி வேடமணிந்து, தனது சின்னமான கிரிக்கெட் பேட், ஹெல்மெட்டுடன் நாமக்கல்லில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார். அதைப் படித்ததும் மேலாளரே ஷாக் ஆகிவிட்டார்.
வாக்காளர்களுக்குப் பணம்
ரமேஷ் மேலாளருக்கு அளித்த தனது மனுவில், விஜய் மல்லையா, மொகுல் சோக்ஸ் உள்ளிட்டவர்களின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தொகையை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் நாமக்கல் தொகுதியில் உள்ள 2.30 லட்சம் வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிப்பை உறுதி செய்ய, அவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்போகிறேன்.
ஆலோசனைக்குப் பின் முடிவு
இதனால் எனது வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, ரூ. 46 கோடி மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவைப் படித்ததும் வங்கி மேலாளருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும், அந்த நபர் அங்கேயே இருந்ததால் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மனுவைப் பரிசீலிப்பதாகக் கூறி, அந்த நபரை அனுப்பி வைத்தார்.