சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்!
நாமக்கல்: பண்ணை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் நாமக்கல் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது நாமக்கல்லில் துப்பாக்கி முனையில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் ராசிபுரம் பொன்மலை கோவில் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ராசிபுரம் அருகே கலைச்செல்வி (58) என்ற பெண் விவசாயி, தனது பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது இரு மகள்களுக்கும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் கலைச்செல்வி வீட்டிற்குத் திரும்பியபோது, முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர்.
அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி கூச்சலிட முயன்றபோது, ஒருவன் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். மற்றொருவன் கலைச்செல்வியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளான். பின்னர், அவர் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த 20,000 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.
பாதிக்கப்பட்ட கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் 'ஸ்டெபி' வரவழைக்கப்பட்டதுடன், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
கோவை சரக டிஐஜி சாமிநாதன் மற்றும் நாமக்கல் எஸ்பி விமலா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications