"கட்டி ஒரு வாரம்தான் ஆச்சு அதுக்குள்ளயா!" நாமக்கல்லில் தண்ணீர் தொட்டி இடிந்து விபத்து! பெண் பலி
நாமக்கல்: ராசிபுரம் அருகே கட்டப்பட்டு ஒரே வாரத்தில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு கட்டுமானங்களிலும் ஊழல் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதுபோன்ற ஊழல் காரணமாக சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

விபத்து
இந்தச் சூழலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் அங்குத் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைகிணறு அருகே உள்ள பெரிய கிணறு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வந்தது. ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாகக் கட்டப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி ஹாலோ பிளாக் கற்கள் மூலம் கட்டப்பட்டு வந்தது. தொட்டியின் கட்டுமான பணிகள் முழுமையாக முடியும் முன்னரே தண்ணீர் தொட்டில் நீரை நிரப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரே வாரம்
இதனிடையே அந்த பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 100 நாள் வேலை வாய்ப்பு நடைபெற்று வந்தது. இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்தச் சமயத்தில் 100 நாட்கள் வேலையில் ஈடுபட்டு இருந்த பாப்பாத்தி என்ற மூதாட்டி தண்ணீர் குடிப்பதற்காகத் தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.

மூதாட்டி பலி
அவர் நீரைப் பிடித்துக் கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாகத் தரமற்ற முறையில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி இடிந்து மூதாட்டி பாப்பம்மாள் மீது விழுந்து உள்ளது. இதில் பாப்பம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அருகே நின்று கொண்டிருந்த மற்றொரு மூதாட்டிக்கு மீதம் கற்கள் விழுந்து உள்ளது. நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

போலீஸ் விசாரணை
காயமடைந்த அந்த மூதாட்டி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தரமற்ற முறையில் நீர்த் தொட்டி கட்டப்பட்டதே அந்த விபத்திற்குக் காரணம் என்றும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications