ரத்த கலரில் மாறிய குடிநீர்! அரண்டுபோன நாமக்கல் மக்கள்.. பள்ளிபாளையத்தில் வெடித்த பஞ்சாயத்து
நாமக்கல்: திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் சாய பட்டறைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இதன் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்ததால், குடிநீர் ரத்த நிறத்தில் மாறியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிறங்கள் உலகில் மிக அற்புதமானவை. நிறங்கள் இருப்பதால்தான் இந்த உலகம் போர் அடிக்காமல் இருக்கிறது. நாம் விரும்பும் பொருட்கள் அனைத்திற்கும் ஒரு நிறத்தை கற்பனை செய்து வைத்திருக்கிறோம். குறிப்பாக ஆடை விஷயத்தில் நிறம் என்பது பிரதானமானதாக இருக்கிறது. எனவே, சாய பட்டறைகளுக்கான டிமாண்டும் அதிகரித்திருக்கின்றன. மறுபுறத்தில் தேவைக்கு அதிகமான கொள்முதலும் அதற்கான உற்பத்தியும் சாய உற்பத்தி செய்யும் பகுதியில் பெரும் மண் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் சில நாட்களுக்கு முன்னர் ஆற்றில் சாய ரசாயன கழிவுகள் கலந்ததால் ஆற்றின் நிறமே மாறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று நாமக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீரின் நிறம் மாறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் போர் நீரை அப்பகுதிகள் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீப நாட்களாக இந்த நீரின் நிறம் மாறியுள்ளது. இதன் உச்சமாக இன்று இந்நீர் ரத்த நிறத்தில் வந்திருக்கிறது. இதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த கழிவுகள் புற்றுநோயை கூட உருவாக்கும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சாய கழிவுகளில் ஈயம், குரோமியம் மற்றும் பாதரசம் போன்றவையும், அசோ எனப்படும் சாயமும் இருக்கிறது. இது தவிர சில கரைப்பான் (solvents) இருக்கின்றன. இவை அனைத்தும் புற்றுநோய் ஏற்படுத்த வாய்ப்பிருக்கும் நச்சுகளாகும்.
அசோ சாயங்கள் பெரும்பாலும் ஜவுளி மற்றும் உணவு பொருட்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மீது சூரிய ஒளி படும்போது அது புற்றுநோய் உருவாக்கும் கலவையாக உருபெறுகிறது. இந்த சேர்மங்கள் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிற கேட்டகிரியில் புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனத்தால் (IARC) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குரோமியம் , காட்மியம் மற்றும் ஈயம் போன்றவையும் சாய பட்டறையில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் நேரடியாக உட்கொள்வதில்லை. ஆனால் சாய கழிவுகள் மூலம் இது மண்ணில் படிந்துவிடுகிறது. நீலத்தடி நீரிலும் கலந்துவிடுகிறது. இவற்றில் குரோமியம் , காட்மியமும் சில பத்தாண்டுகள் வரை மண்ணில் வீரியமாக இருக்கும். ஆனால் ஈயம், நூற்றாண்டுகள் வரை அதன் வீரியத்தை இழக்காது என்பது கவனிக்கத்தக்கது.
சாய உற்பத்தியின் மூலம் வெளிப்படும் மற்றொரு ஆபத்தான கழிவு, கரைப்பான்களாகும் (solvents). பென்சீன் மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற கரைப்பான்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளாக அறியப்படுகிறது.
ஆக இவ்வளவு அச்சத்திற்கு மத்தியில்தான் சாமானிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, சாய கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டியது ஆலைகளின் கடமையாகும். அதை கண்காணிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.












Click it and Unblock the Notifications