கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள்
நாமக்கல்: தமிழகத்தில் கிராவல் மண் குவாரிகளில் நடந்து வரும் முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார். அனுமதி பெறாமல் அருகில் உள்ள பட்டா நிலங்களில் மணல் எடுத்தும், ஒரு யூனிட் கிராவல் மண்ணுக்கு ரூ.2 ஆயிரம், மணலுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7,500 பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் முறையான அனுமதி சீட்டு கொடுக்காமல், போலியான நடைச்சீட்டு கொடுத்து, அரசுக்கு தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள் என குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கிராவல் மண், சவடு மண் எடுக்கப்படுகிறது. இதற்காக கனிமவளத்துறையிடம் அனுமதி பெற்று எடுக்கிறார்கள். அதேநேரம் பட்டா இடங்களிலும், அனுமதி பெறாத அரசு புறம்போக்கு இடங்களிலும் சட்ட விரோதமாகவும், முறைகேடாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டும் வருகிறது.

அத்துடன் அனுமதி பெறாமல் அருகில் உள்ள பட்டா நிலங்களில் மணல் எடுத்தும், ஒரு யூனிட் கிராவல் மண்ணுக்கு ரூ.2 ஆயிரம், மணலுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7,500 பெற்றுக்கொள்கிறார்கள். அத்துடன் முறையான அனுமதி சீட்டு கொடுக்காமல், போலியான நடைச்சீட்டு கொடுத்து, அரசுக்கு தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார்கள். கிராவல் மண் மற்றும் சவடு மண் எடுக்க செல்லும் லாரிகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ராயல்டி என ரூ.700 ரூபாய் வீதம் அடாவடியாக வசூலித்து வருகிறார்கள்.
ஒரு லாரிக்கு ஒரே நடைச்சீட்டு மட்டும் கொடுத்து, அதை வைத்துக்கொண்டு மூன்று நடை எடுத்து செல்ல வற்புறுத்துகிறார்கள். அவ்வாறு செல்லும்போது வருவாய் துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்கிறார்கள். அந்த சோதனையில் போலி நடைச்சீட்டு வைத்துள்ளதாக கூறி வழக்குகள் பதிவு செய்கிறார்கள். தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைக்கிறார்கள். இதனால் மணல் லாரி தொழில் முடங்கி போய் இருக்கிறது.
இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், துறையின் அமைச்சர் துரைமுருகன், கனிமவளத்துறை செயலாளர், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நேரில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் கிராவல் மண் குவாரிகளில் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கனிம வளத்துறையில் ஊழல் செய்தவர்கள் மீதும், இதற்கு துணை போன அரசு துறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆளுநரை நேரில் சந்தித்து, தனியார் இயற்கை கனிமவள கொள்ளை மற்றும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications