2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்
குழந்தையை விற்பனை செய்த அமுதாவிடம் 2-வது நாளாக விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
Recommended Video
நாமக்கல்: "2 வருஷத்தில 25 குழந்தைகளை விற்றேன்" என்று போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் கொல்லிமலையில் சிபிசிஐடி போலீசார் அமுதா உள்ளிட்ட 3 பேரிடம் நடத்தும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
ராசிபுரத்தில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்து வந்தவர்தான் அமுதா. இவர் நர்ஸாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
கொல்லிமலையில் உள்ள ஏழை பெற்றோர்கள்தான் அமுதாவின் இலக்கு. அவர்களிடம் குறைந்த விலைக்கு குழந்தைகளை வாங்கி, வசதிபடைத்த குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று இருக்கிறார்.
மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி
சிறையில் அடைப்பு
ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, பள்ளிபாளையம் உள்ளிட்ட ஊர்களில் குழந்தை விற்பனை நடந்திருக்கிறது. இது சம்பந்தமாக அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், உட்பட 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
டிரைவர் முருகேசன்
இதுவரை 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று, அமுதவள்ளி, டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 குழந்தைகள்
அப்போது அமுதா சொல்லும்போது, "2 வருஷத்தில் 25 குழந்தைகளை விற்றிருக்கிறேன். இரு தரப்பு பெற்றோர்களிடமும் பத்திரத்தில் எழுதி, கையெழுத்து வாங்கிட்டுதான் விற்றேன். இதுவரைக்கும் நான் யாரையும் கட்டாயப்படுத்தி குழந்தைகளை விற்பனை செய்யவில்லை" என்று வாக்குமூலம் அளித்தார்.
அமுதவள்ளி
இதுபோலவே முருகேசனும் ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். அதில் நிறைய விஷயங்களை கக்கி உள்ளார் போலும். வெறும் 25 குழந்தைகளை மட்டுமே விற்றதாக அமுதா சொன்னாலும், கடந்த 10 வருஷத்தில் நூற்றுக்கணக்கான கொல்லிமலை குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நர்ஸ்கள்
அதனால் கடந்த 2 நாட்களாக கொல்லிமலை கிராமங்களிலேயே சிபிசிஐடி போலீசார் தங்கியிருந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், அமுதாவுக்கு உதவி செய்த நிறைய நர்ஸ்கள், ரிடையர் ஆகிவிட்டனர். அதனால் அவர்களை தேடி பிடித்து இனிமேல்தான் அவர்களிடம் தனி விசாரணை ஆரம்பிக்க வேண்டும். அதனால் எப்படியும் அமுதாவை கொல்லி மலைக்கு கூட்டிச்சென்றுதான் விசாரணை நடத்தப்படும்.
40 ஆயிரம் ரூபாய்
இதனிடையே சிபிசிஐடி போலீசார் கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 2 வருடங்களில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் யார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அமுதா வெறும் ரூ.40 ஆயிரம்தான் தந்து குழந்தையை வாங்கி கொண்டு போனாராம். இது சம்பந்தமாக இன்னும் விவரங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.