பைக் பறிமுதல் செய்ததால்.. தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர்.. நாமக்கல் பயிற்சி எஸ்ஐ மீது ஆக்ஷன்
நாமக்கல்: நாமக்கல் அருகே இளைஞர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது உடலை வைத்து உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பயிற்சி எஸ்ஐ-யை சஸ்பெண்ட் செய்து எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தண்டாரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் வேலகவுண்டம்பட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது வேலகவுண்டம்பட்டி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். மணிகண்டன் மதுபானம் குடித்து போதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் கூறினர்.
இதையடுத்து மணிகண்டனை அழைத்து அருகே உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து கொண்டதோடு மணிகண்டனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் காவல் நிலையம் வர வேண்டும். அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்ற மணிகண்டன் இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மணிகண்டனை போலீசார் தாக்கியது தான் அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதோடு மறியல் போராட்டத்தை தொடங்கினர். வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு மணிகண்டனின் உடலை வைத்து அவர்கள் மறியல செய்தனர்.
இதனால் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் டிஎஸ்பி சங்கீதா உள்ளிட்ட உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது தவறு செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் தான் பயிற்சி எஸ்ஐ மோகன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதாவது பயிற்சி எஸ்ஐ மோகன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications