பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்களின் பல்ஸை பிடித்த விஜய்! கேள்விக்கு பதில் என்ன?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொன்னார்களே, செய்தார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
"அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி எண் 152ல் திமுக உறுதி கொடுத்திருந்தது. சொன்னாங்களே, செஞ்சாங்களா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மீது இருக்கும் மிகப்பெரிய அதிருப்தி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தாததுதான். தேர்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்திருந்தாலும் இன்று வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. நிதியில்லை என்று சொல்லி அரசு தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யும் இந்த பிரச்சனையை கையில் எடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
கடந்த 2004 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் முடிவடைந்து, புதிய ஓய்வு திட்டத்தை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. எனவே மாநில அரசுகளும் இதையே பின்பற்றி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் அடிப்படையில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்காக அரசு ஊழியர் முன்கூட்டியே எந்த பணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடைசி மாதத்தின் மொத்த சம்பளத்தை கணக்கில் கொள்ளாமல், அடிப்படை சம்பளத்தை மட்டும் கணக்கிட்டு, அதிலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல பணி செய்யும் போதே ஓய்வூதியத்திற்காக ஊழியர்களின் மொத்த சம்பளத்திலிருந்து 10 சதவீதம் பிடிக்கும் செய்யப்படும். இதுதான் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் பிரச்சினை. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதரவாக கோரிக்கைகள் பல எழுந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது. இக்குழு தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்கள், கருத்துக்கேட்புகளை கேட்டு சமர்ப்பிக்கும். செப்.30ம் தேதிக்குள் குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். எனவே தீபாவளிக்கு முன்னர் அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications