ஓபிஎஸ்சுக்கு சிக்கல்: வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு: உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக வெளியான தகவலில் ஓபிஎஸ் , 2017 -18ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாகவும், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் வழக்கு பதிவு செய்தது. சேகர் ரெட்டி வீட்டில் இதை தொடர்ந்து தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டது.
சிபிஐ, அமலாக்கத்துறை நடத்திய தொடர் ரெய்டுகளில் ரெட்டிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரூ.166 கோடி பணம், 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் கூறப்பட்டது. 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் இதில் கைப்பற்றப்பட்டன.

ரெய்டு மேல் ரெய்டு
சேகர் ரெட்டிக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமை செயலகத்திலும் கூட அப்போது ரெய்டு நடத்தப்பட்டது. தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய அமைப்புகள் இப்படி ரெய்டு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

டைரி குறிப்பு
இந்த நிலையில் சேகர் ரெட்டி முறைகேடு பூதம் அடங்கிவிட்டது என்று கருதப்பட்ட நிலையில் அதிமுக தரப்பிற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டி வீட்டு ரெய்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் சிவப்பு நிற டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதில் அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரின் பெயர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்களும் இடம்பெற்று இருந்ததாக வருமானவரித்துறை தரப்பு தெரிவித்தது.

சேகர் ரெட்டிக்கு நெருக்கம்
இந்த டைரியில் யாருக்கெல்லாம் ஒப்பந்தத்தாராக இருந்த போது சேகர் ரெட்டி பணம் அனுப்பினார் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. சேகர் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அதிமுகவின் தலைவர்கள் பலர் இருந்ததாக தகவல் வெளியானது. இதை வருமானவரித்துறை கையில் எடுத்தது. சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக செபடம்பர் மாதம் 22 ஆம் தேதி தகவல் வெளியானது. அதில் ஓபிஎஸ் உள்ளிட்ட 12 அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது.

மவுனம் காப்பு
இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால அதை அப்போது அதிமுக தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. இந்நிலையில் வருமான வரித்துறை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு ரூ.82.12 கோடி வரி கட்டச்சொல்லி நோட்டிஸ் விட்டது வெளியாகியுள்ளது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் இது வெளியே தெரிய வந்துள்ளது.

ரூ 82.12 கோடி கட்டச்சொல்லி வருமான வரித்துறை நோட்டீஸ்
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ்-க்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், 82 கோடியே 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு
இந்த நோட்டீசில் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். இதன்மூலம் ஓபிஎஸ் வருமானவரித்துறையில் ஆஜராகி மேற்கண்ட வரிபாக்கி குறித்து உரியவிளக்கம் அளிக்கும் நிலைக்கு உயர் நீதிமன்ற உத்தரவு தள்ளியுள்ளது. ஏற்கெனவே பல சிக்கல்களில் உள்ள ஓபிஎஸ்சுக்கு மேலும் ஒரு புதிய சிக்கலாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications