நியூயார்க் டூ டெல்லிக்கு புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதி வழியில் தரையிறக்கம்
நியூயார்க்: நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு 199 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து போர் விமானங்கள் சூழ, இந்த விமானம் நேற்று இத்தாலியில் தரையிறக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA292 உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8.20 மணிக்கு நியூயார்க்கிலிருந்து புறப்பட்டிருக்கிறது. அங்கிருந்து டெல்லி வருவதற்கு மொத்தம் 14 மணி நேரம் ஆகும்.

அஜர்பைஜான் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானம் வந்துக்கொண்டிருந்தது. ஆனால், தரையிறங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னர் திடீரென விமானம் யு-டர்ன் அடித்தது. தொடக்கத்தில் பயணிகளுக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நாம் யு-டர்ன் எடுத்திருக்கிறோம் என விமானி விளக்கமளித்துள்ளார். மட்டுமல்லாது விமானத்திற்கு, தைபூன் ரக போர் விமானங்கள் 2 பாதுகாப்புக்கு வந்திருக்கின்றன.
பின்னர் விமானம் ரோம் நகரின் ஃபியமிசினோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றனர். விமானமும் முழு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, விமானம் பாதுகாப்பாக டெல்லிக்கு வந்து சேர்ந்தது.
பாதுகாப்புக்குதான் எங்களின் முதல் முன்னுரிமை. ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பயணிகளுக்கும் நன்றி என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்த பயணிகள் விமானம் ஒன்று, போர் விமானங்களின் பாதுகாப்புடன் இத்தாலிக்கு திருப்பி விடப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
சமீப காலங்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் விமான நிறுவனங்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. ஒவ்வொரு முறை மிரட்டல் விடுக்கப்படும்போதும் இந்திய விமானங்கள் வெளிநாடுகளில் தரையிறங்குகின்றன. அங்கு முழு பரிசோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்று தெரிய வருகிறது.
இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவது மட்டுமல்லாது, விமான நிறுவனங்களுக்கும் செலவு அதிகமாகிறது. ஆகவே இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications