வானத்தில் இருந்து.. சட்டென கிலோ கணக்கில் விழுந்த ஐஸ் கட்டி.. இது ஆலங்கட்டி அல்ல வேற! ஷாக் சம்பவம்
நியூயார்க்: அமெரிக்காவில் சுமார் 9 கிலோ எடைகொண்ட ஐஸ் கட்டி ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக அதிர்ஷ்டம்தான் கூரையை பிச்சுக்கிட்டு வந்து விழும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு அதிர்ஷ்டத்திற்கு பதில் ஐஸ் கட்டி வந்து விழுந்திருக்கிறது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்றிரவு வீட்டிலிருந்தவர்கள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென பெரிய சத்தம் கேட்டிருக்கிறது. பக்கத்தில் ஏதோ வெடிவிபத்து நடந்ததை போன்று இந்த சத்தம் இருந்திருக்கிறது.

இதனையடுத்து உடனடியாக விழித்துக்கொண்ட வீட்டு உரிமையாளர் ஜெஃப், டார்ச்சை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பார்த்தார். ஆனால் வெடி விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. புகை மூட்டமில்லை, தீ இல்லை எனவே எங்கிருந்து இந்த சத்தம் வந்தது என்பதை தேட தொடங்கினார். மறுபுறம் இந்த சத்தத்தை கேட்டு வீட்டிலிருந்த குழந்தைகள் எழுந்துவிட்டதா? என்பதை பார்க்க மாடிக்கு சென்றிருக்கிறார். ஆனால் நல்வாய்ப்பாக குழந்தைகள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்துள்ளன.
ஆனால் அந்த அறையின் தரையில் ஓட்டை விழுந்திருக்கிறது. மேலே கூரையை பார்த்தால் கூரையும் ஓட்டையாகியிருக்கிறது. விஷயம் புரியாமல் பேஸ்மட்க்கு சென்று இவ்வளவு பெரிய ஓட்டையை ஏற்படுத்திய பொருள் எது என்று தேடியுள்ளார். அவர் கண்டது ஓர் ஐஸ் கட்டியை! இந்த ஐஸ் கட்டி சுமார் 8-9 கிலோ வரை இருந்திருக்கிறது. இதுதான் வானத்திலிருந்து விழுந்து வீட்டின் கூரையிலும், முதல் தளத்திலும் ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல கொஞ்ச நேரத்திற்கு முன்னர் கேட்ட பலத்த சத்தத்திற்கும் இந்த ஐஸ்கட்டிதான் காரணம் என்பது அப்போதுதான் ஜெஃப்க்கு புரிந்திருக்கிறது.
இது குறித்து அவரது மனைவி கூறுகையில், "நாங்கள் ஒரு பெரிய வெடி சத்தத்தை கேட்டோம். பக்கத்து வீட்டில் ஏதோ வெடி விபத்து நடந்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால் அதன் பின்னர்தான் எங்கள் வீட்டின் கூரை ஓட்டையாகியிருந்ததை பார்த்தோம். இதற்கு காரணம் ஐஸ் கட்டிதான். சுமார் 9 கிலோ எடைகொண்ட ஐஸ் கட்டி விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் எங்களுக்கும், எங்களின் குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த ஐஸ் கட்டி பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்திலிருந்து தான் விழுந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது. கூரையை பிளந்துக்கொண்டு ஐஸ் கட்டி விழுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் புயல் காலங்களில் பெரிய அளவில் ஐஸ் கட்டிகள் இப்படி விழுந்திருக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டில், அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள விவியனில் சுமார் 1 கிலோ எடைகொண்ட ஐஸ் கட்டி வானத்திலிருந்து விழுந்திருக்கிறது. ஆனால் தற்போது மசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஐஸ் கட்டி விழுந்தபோது வானம் தெளிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications