சுத்தி சுத்தி பறந்து.. கலங்கடித்த மற்றுமொரு மர்மபொருள்.. சுட்டுவீழ்த்திய கனடா.. சீன உளவு பலூனா?
கனடாவில் வானில் பறந்த மர்மபொருளை சுட்டுவீழ்த்தியதாக மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது
நியூயார்க்: கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறந்துள்ள நிலையில், அமெரிக்க விமானத்தால் அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கனேடிய மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய காரணத்தால், அந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே வாரம் முழுவதும் ராட்சத பலூன் விவகாரம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி, அதிர்ச்சியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளவாடப் பகுதிகளின் வான்பரப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டது... அந்த நொடி முதலே, அந்த மர்ம பலூன் பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் வலம் வரத் துவங்கிவிட்டன.

மெகா பலூன்
எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது சீனா என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது... உலக நாடுகள் இந்த விவகாரத்தை உற்றுநோக்கிய நிலையில், கடந்த சனிக்கிழமை சீனாவின் உளவு, பலூனை சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த சீனா, பிறகு ஒப்புக் கொண்டது. "ஆமா, வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான்... வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாக திசை மாறி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது" என்ற விளக்கம் தந்தது.

ஆகாய கப்பல்
ஆனால், சீனாவின் விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, தனது கடும் கண்டனங்களை, இந்த விவகாரத்தில் பதிவு செய்தது.. வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட ஆகாய கப்பல் வகைதான் என்று சீனா தெரிவித்திருந்தும், அது சுட்டு வீழ்த்தப்பட்டதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது.... இதனிடையே அமெரிக்கா மட்டுமல்லாது சீன விமானப் படையால் இயக்கப்படும் இந்த உளவு பலூன்களானது இதுவரை 5 கண்டங்களை கடந்துள்ளதாகவும், இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளை உளவு பார்த்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகின.

மர்ம பொருள்
இந்த உளவு பலூன் சர்ச்சை அடங்குவதற்குள் கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் பறந்துள்ளதாக கூறி, அமெரிக்க ராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியது.. "அந்த பொருள் என்னவென்றே தெரியவில்லை.. அலாஸ்கா மீது பறந்த பொருளானது 40,000 அடி உயரத்தில் காணப்பட்டது.. பயணிகள் விமானங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டது.. அதனால், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கிணங்க, அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தி விட்டோம்" என்று வெள்ளை மாளிகை தரப்பு விளக்கம் தந்தது..

மர்ம பொருள்
இந்த நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து, அதன் அண்டை நாடான கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது... இந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள யூகோன் பிராந்தியத்தின் வான்வெளியில் பல ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்து கொண்டிருந்ததாம்.. இதை கனடா ராணுவம் உறுதி செய்தது.. அந்த மர்ம பொருளை உடனடியாக சுட்டு வீழ்த்த அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவிட்டதையடுத்து, அமெரிக்கா-கனடாவின் வான்வெளியை பாதுகாக்கும் இருநாட்டு கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எப்-22 ரக போர் விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது.

சிறிய பொருள்
அதேபோல, அமெரிக்கா, கனடா எல்லையில் உள்ள லேக் ஹுரான் பகுதியில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.. ஒரே மாதத்தில் 4வது தடவையாக வானில் மர்ம பொருள் பறந்துள்ளதும், அந்த மர்ம பொருள்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் விமான போக்குவரத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்திற் கொண்டே குறித்த மர்மபொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விளக்கம் தரப்பட்டுள்ளது... மேலும், கடந்த வாரம் அமெரிக்காவில் பறந்த சீன பலூனை விட இந்த உருண்டை வடிவ மர்ம பொருள் சிறியதாக இருந்தது என்று, கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications