சீறிப்பாய்ந்த எப் 22 விமானம்.. சீனாவின் "ராட்சச" உளவு பலூனை.. சுட்டு வீழ்த்தியது அமெரிக்க விமானப்படை
சீன பலூன் கடல் பகுதிக்கு சென்றதும் 3 எப் 22 போர் விமானங்கள் அந்த பலூனை சுற்றி பறந்து, பின்னர் சுட்டு வீழ்த்தியது.
நியூயார்க்: அமெரிக்காவின் மீது பறந்து கொண்டு இருந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்காவின் எப் 22 போர் விமானம். கிழக்கு கடற்கரை வான்பகுதியில் பறந்து கொண்டு இருந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
Recommended Video
அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இந்த உளவு பலூன் பறந்து கொண்டு இருந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. முக்கியமாக வடக்கு அமெரிக்கா பகுதியில் இந்த உளவு பலூன் பறந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதற்கான புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. ராட்சச வெள்ளை நிற பலூனில் ஹீலியம் அடைக்கப்பட்டது 30 கிமீ உயரத்தில் அவை பறந்து கொண்டு இருந்தன.

பலூன்
அதோடு இந்த பலூனில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் இதில் கேமரா, இரவில் பார்க்க கூடிய அகச்சிவப்பு தொழில்நுட்பங்கள், பல்வேறு சென்சார்கள், உடனுக்குடன் இமேஜ்களை சீன தளவாடங்களுக்கு அனுப்பும் தொலை தொடர்பு சாதனங்களும் கூட இடம்பெற்று இருந்தன. இந்த பலூனைதான் தற்போது அமெரிக்கா சுட்டு வீழ்த்தி உள்ளது. பலூன் வெடித்து சிதறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. எப் 22 போர் விமானம் மூலம் இந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.

வெடித்த பலூன்
கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்க சென்றுள்ளது. பெரிய கிரேன் கொண்ட மீட்பு கப்பல்கள் இந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை செய்ய உள்ளது. இந்த பலூன் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை வேவு பார்த்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதிபர் விளக்கம்
இது தொடர்பாக பிடன் அளித்துள்ள விளக்கத்தில், நாங்கள் வெற்றிகரமாக இந்த பலூனை சுட்டு வீழ்த்திவிட்டோம். அமெரிக்காவின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அமெரிக்க மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அதில் நாங்கள் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இந்த பணியை செய்த விமானப்படை அதிகாரிகளுக்கு எங்களின் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம், என்று பிடன் தெரிவித்துள்ளார்.

சீனா
ஆனால் சீனாவோ இது குறித்து அளித்த விளக்கத்தில், அந்த பலூன் உளவு பலூன் அல்ல. அது மக்கள் பயன்பாட்டிற்காக இருக்கும் சாதாரண பலூன். அதாவது வானிலை போன்ற கமர்ஷியல் தேவைகளுக்கான பலூன். வானிலை மாறுபாடு, காற்று மாறுபாடு காரணமாக அந்த பலூன் அமெரிக்காவிற்குள் வந்துவிட்டது. மற்றபடி இதற்கும் உளவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இவர்கள் கமர்ஷியல் பலூன் ஒன்றை தாக்கி உள்ளனர். இது மிகவும் தவறான செயல் என்று விமர்சனம் வைத்துள்ளது. முன்னதாக சீனாவின் இந்த பலூன் மக்கள் வாழும் பகுதிக்கு மேலே பறந்தது. இதனால் அது கடல் பகுதிக்கு செல்லும் வரை அமெரிக்க விமானப்படை காத்து இருந்தது. அதை தொடர்ந்து கடல் பகுதிக்கு சென்றதும் 3 எப் 22 போர் விமானங்கள் அந்த பலூனை சுற்றி பறந்து, பின்னர் சுட்டு வீழ்த்தியது.












Click it and Unblock the Notifications