'ஆபாச கேஸ்'.. நரகத்தை நோக்கி அமெரிக்கா.. பொங்கிய டொனால்ட் டிரம்ப்.. ஆளும் கட்சி மீது சரமாரி விமர்சனம்
நியூயார்க்: பிரபல ஆபாச பட நடிகையுடன் தனக்கு இருந்த தொடர்பை மறைக்க அந்த நடிகைக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கில் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடு நரகத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். ஆனால், இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் இவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில், டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தான் சார்ந்த குடியரசுக் கட்சியின் பிரசார நிதியிலிருந்து ரூ.1 கோடியை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறையாகும். இப்படி இருக்கையில் இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் டிரம்ப் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நேற்று அவர் நியூயார்க் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் சில வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதேபோல அவரது கைரேகைகள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டன. டிரம்ப் நீதிமன்றத்தில் சரணடைந்தபோது அவருடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் நீதிமன்றத்திற்கு வெளியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. பொதுவாக இந்த வழக்கில் ஜாமீன் கிடைப்பது அரிதான ஒன்று. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடந்துக்கொள்ளும் முறையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வாய்ப்பிருக்கும். அதாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜரானால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
டிரம்ப்பும் தற்போது அதைத்தான் செய்திருக்கிறார். அதுபோல, நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நான் ஒரு நிரபராதி. அமெரிக்காவில் இப்படி எது வேண்டுமானாலும் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா தற்போது நரகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டை அழிக்க நினைப்பவர்களிடமிருந்து நாட்டை காக்க முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். தீவிர இடதுசாரி வழக்கறிஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புக்கள் திரும்பப்பெறப்பட்டது மற்றும் அமெரிக்காவின் எல்லைகளை திறந்து வைத்ததற்காக உலகமே எங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது" என்றும், அதிபர் பைடன் மற்றும் அவரது கட்சி மீதும் சரமாரியாக விமர்சனங்களை டிரம்ப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications