வரி விதிப்பால் அமெரிக்கர்களுக்கு கஷ்டம் இருக்கும்! ஆனா மக்கள் இதை தாங்கிதான் ஆகணும்.. டிரம்ப் பேச்சு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா, மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்தார். இதற்குப் பதிலடியாக அந்த நாடுகளும் வரிகளை விதிக்க தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் சற்று வலியை உணரக்கூடும் என்ற போதிலும் இது அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கத் தேவையான ஒன்று எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவர் போடும் உத்தரவுகள் அமெரிக்காவைத் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகிறது.

நிர்வாக உத்தரவு:
இதற்கிடையே அண்டை நாடான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரி மற்றும் சீனா மீது ஏற்கனவே உள்ள வரிகளுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதற்குச் சம்பந்தப்பட்ட நாடுகளும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளன. கனடா ஏற்கனவே அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி விதித்துள்ளார். மெக்சிகோ மற்றும் சீனாவும் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
உலக நாடுகள் இதுபோல மாறி மாறி வரி விதிக்க தொடங்கினால் அது சர்வதேச அளவில் ஒரு வர்த்தக போரை உருவாக்கும் என்றும் இது அமெரிக்க வளர்ச்சியைக் குறைக்கும் என்றும் அந்நாட்டுப் பொருளாதார வல்லுநர்களே எச்சரித்துள்ளனர். மேலும், இதுபோன்ற வரி நடவடிக்கைகளால் பல்வேறு பொருட்களின் விலையும் கூட உயரும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
டிரம்ப் பேச்சு:
இது அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், "இதனால் அமெரிக்கர்களுக்கு வலி இருக்குமா? ஆம், இருக்கலாம்.. (இல்லாமலும் போகலாம்). ஆனால் நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். அதற்காக நான் இந்த விலையைச் செலுத்த வேண்டி உள்ளது" என்று கூறியுள்ளார்.
டிரம்ப் போட்ட அந்த "ஒரு" உத்தரவு.. பறக்க தொடங்கிய தங்கம் விலை.. இனி நிற்க வாய்ப்பே இல்லையாம்!
டிரம்பின் வரி விதிப்பை அமெரிக்காவில் உள்ள பொருளாதார வல்லுநர்களே கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். வலதுசாரி சிந்தனை கொண்ட வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் குழு, டிரம்பின் வரி விதிப்பை "வரலாற்றில் முட்டாள்தனமான வர்த்தகப் போர்" குறிப்பிட்டுள்ளது. மேலும், டிரம்பின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால், இந்த விமர்சனத்தையும் டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவில் இணையும் கனடா:
அதேபோல தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாகக் கனடா மாற வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் மேலும் கூறுகையில், "மானியம் என்ற பெயரில் கனடாவுக்கு அமெரிக்கா பல நூறு பில்லியன்களை வழங்கி வருகிறது. இந்த மானியம் இல்லையென்றால் கனடாவால் ஒரு சுதந்திர நாடாக இருக்கவே முடியாது. எனவே, அமெரிக்காவின் 51ஆவது நாடாக கனடா மாற வேண்டும். இதன் மூலம் குறைந்த வரியும் கனடா மக்களுக்கு மிகச் சிறந்த ராணுவ பாதுகாப்பும் கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
என்ன காரணம்:
சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல், ரவுடிகள் பிரச்சினை கனடாவும் மெக்சிகோவும் தடுக்க தவறியதாகவும் இது அமெரிக்காவிலும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதன் காரணமாகவே இரு நாடுகளுக்கும் கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதாக டிரம்ப் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications