சர்ச்சை! கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம் தெரியுமா
நியூயார்க்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Recommended Video

தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின்கள் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான பேராயுதமாக கருதப்படுகிறது. கொரோனா வேக்சின்கள் தீவிர பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது.
வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, அதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இருப்பினும், சிலர் வேக்சின் போட்டுக் கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.

போராட்டம்
இதனால், பொதுமக்களை வேக்சின் போட்டுக் கொள்ள வைக்கும் வகையில் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கனடா -அமெரிக்கா எல்லைகளைக் கடக்க வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கனடா அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் கடந்த ஜன. 29ஆம் தேதி முதல் தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை
சாலையோரங்களில் டிரக்குகளை நிறுத்திவிட்டு, இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக டிரக் ஓட்டுநர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிரக் ஒட்டுநர்களின் இந்தப் போராட்டம் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் சில வாரங்கள் இந்தப் போராட்டத்திற்கு எதிராகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த கனடா நாடு முழுவதும் அவசர நிலையை ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார். மேலும், போராட்டக்காரர்களைக் கலைக்கத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவித்தார்.

ஹிட்லர்
குறிப்பாக போராட்டக்காரர்களுக்குச் செல்லும் நிதியுதவியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். போராட்டக்காரர்களை ஒடுக்கும் இந்த நடவடிக்கைக்குப் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், சிலர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லர் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிடும் வகையிலான மீம் ஒன்றை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

எலான் மஸ்க்
இருப்பினும், கொஞ்ச நேரத்திற்குப் பின்னர், இந்த ட்வீட்டை மஸ்க் டெலிட் செய்துவிட்டார். எலான் மஸ்க் இது போன்ற சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது முதல்முறை இல்லை என்றாலும் கூட, வேக்சின் கட்டுப்பாடுகளை அறிவித்த கனடா பிரதமரை, பல லட்சம் பேரைக் கொன்று குவித்த ஹிட்லருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளதை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த கருத்திற்கான எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அமெரிக்க யூதக் குழு வலியுறுத்தி உள்ளது.

சர்ச்சை
சுமார் 74 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் சர்வதேச அளவில் அதிகம் பின்தொடரும் ட்விட்டர் கணக்குகளில் ஒன்றாக எலான் மஸ்க்கின் கணக்கு உள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தையே தனது நிறுவனங்களின் மார்க்கெட்டிங்கிற்கும் பயன்படுத்தி வருகிறார். வரி விகிதங்களிலும் அமெரிக்கா அரசைத் தொடர்ந்து சாடி வரும் எலான் மஸ்க், மீது விசாரணை நடத்துவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் ஆலோசித்து வரும் நிலையில், அவரது இந்த ட்வீட் சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications