பூமியில் நரகம் என்று ஒன்றிருந்தால்... அது இன்று காசாவில் குழந்தைகளின் வாழ்க்கைதான்.. ஐநா வேதனை
நியூயார்க்: காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பூமியில் நரகம் என்று ஒன்று இருந்தால், அது இன்று காசாவில் குழந்தைகளின் வாழ்க்கைதான் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக காசாவில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த சிக்கலைத் தீர்க்க எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளும் தோல்விலேயே முடிந்துள்ளது.
காசா பகுதி தங்களுடையது என இஸ்ரேல் உரிமை கொண்டாடுகிறது. பாலஸ்தீனத்தின் இறையாண்மையில் இஸ்ரேல் தலையிடுவதாக ஹமாஸ் படை குற்றஞ்சாட்டியது.

காசாவில் தொடரும் தாக்குதல்
இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள அல் அக்சா மசூத்திக்குள் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுத்து இஸ்ரேல் காசா மீது தொடர் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் கண்டறிய வகையில் மிகக் கொடூர தாக்குதலாக இது அமைந்துள்ளது.

கண்டனம்
தற்போது தாக்குதல்கள் குறைந்திருந்தாலும், இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இஸ்ரேல் நடத்தி வரும் இந்த கண்மூடித் தனமான தாக்குதலில் இதுவரை குறைந்தபட்சம் 230 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, 75க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இதில் உயிரிழந்திருந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் எனக் கண்டனங்கள் தொடர்ந்து வலுத்து வருகிறது.

நரகம் என்று ஒன்றிருந்தால்
இந்நிலையில், இது குறித்து ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், "பூமியில் நரகம் என்று ஒன்று இருந்தால், அது இன்று காசாவில் குழந்தைகளின் வாழ்க்கைதான். இந்த தாக்குதல் காரணமாகச் சாலைகள் மற்றும் மின்சார இணைப்புகள் உள்ளிட்ட காசாவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. காசாவில் தற்போது, மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை
உடனடியாக காசா பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். இஸ்ரேல் ராணுவம் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும் பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ராக்கெட் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் . அதேநேரம் காசா பகுதியில் தேவையான வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தரும் கடமை இஸ்ரேலிடம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications