"வெளியே போங்க".. ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவாலை வெளியே தள்ளினார்களா அதிகாரிகள்? என்ன நடந்தது?
நியூயார்க்: ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் வெளியேற்றப்பட்டது எப்படி என்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில் அதன் சிஇஓவாக அவர் பதவி ஏற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிறுவனத்தின் உரிமை மட்டுமின்றி, நிறுவனத்தை நேரடியாக கண்காணிக்கும் பணிகளையும் அவரே செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கியமாக ட்விட்டர் நிறுவனம் மூலம் தடை செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் போன்ற உறுப்பினர்கள் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

விற்பனை
நேற்று ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க். 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது. முன்பு இந்த 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்ட பின் அதில் இறுதி கையெழுத்து போடாமல் எலான் மஸ்க் நேரம் தாழ்த்தி வந்தார். இதற்கு எதிராக வழக்கு போடப்படும் என்று ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக நிறுவனம் கைமாறியது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎப்ஓ உள்ளிட்ட மற்ற உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தலைமையகத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எலான் மஸ்க் நேற்றுதான் சென்றார். இந்த நிலையில் இன்று மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு உள்ளனர்.

நீக்கம்
இந்த நிலையில்தான் ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் வெளியேற்றப்பட்டது எப்படி என்று பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அதன்படி ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவாலை அதிகாரிகள் வெளியே அனுப்பியதாகவும். அவரின் பொருட்களோடு வெளியே அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சர்வதேச ஊடகங்கள் சில இதை மறுத்து உள்ளனர். அதன்படி இன்று ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் அலுவலகம் வந்ததும் அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பராக் அக்ரவால்
அவரை பணியில் இருந்து நீக்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். வெளியேறும் முன் அவர் தனக்கு நெருக்கமான சில அதிகாரிகளிடம் மட்டும் பேசி உள்ளார். மற்றபடி பிரிவு உபசார பேச்சு எதையும் அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அமைதியாகவே அலுவலகத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.

என்ன நடந்தது?
சியான் எட்ஜெட் என்ற அதிகாரி மட்டும்தான் கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இவர் ட்விட்டர் தலைமை கழக உறுப்பினராக இருந்துள்ளார். அவர் தனது பதவி நீக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரை அதிகாரிகள் கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்து பார்க்கிங்கில் விட்டுள்ளனர். இவரைதான் சிலர் பராக் என்று தவறாக நினைத்துக்கொண்டதாக் கூறப்படுகிறது. மற்றபடி, வேலையில் இருந்து நீக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் அமைதியாக அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மாற்றம்
முன்னதாக மஸ்க் தனது ட்விட்டர் பயோவில் "Chief Twit" என்று மாற்றிவிட்டார். அதாவது நான்தான் இந்த நிறுவனத்தின் தலைவர் என்பதை உணர்த்தும் விதமாக அந்த மாற்றத்தை மஸ்க் செய்து இருந்தார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராகிறார் மஸ்க். அந்த நிறுவனமும் பங்கு சந்தையில் இருந்து வெளியேறி உள்ளது. தற்போது அந்த நிறுவனம் பங்கு சந்தையில் இல்லாத முழு தனியார் நிறுவனம். இதன் ஒரே உரிமையாளர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications