பனியில் உறைந்தே உயிரிழந்த 4 இந்தியர்கள்.. மைனஸ் 35 டிகிரி செல்சியஸ்... கனடா எல்லையில் பயங்கரம்
4 இந்தியர்கள் பனியில் உறைந்தே உயிரிழந்துள்ளனர்
நியூயார்க்: அமெரிக்க எல்லையில் ஒரு கைக்குழந்தை உட்பட 4 இந்தியர்கள் பனியில் உறைந்து உயிரிழந்தது தொடர்பாக தூதரக ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
கனடாவின் மத்திய மானிடோபா மாகாணத்தில் உள்ளது எமர்சன் என்ற நகரம்.. இந்த பகுதி அமெரிக்க எல்லையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகிறது.. அதில் இந்த பகுதியும் ஒன்றாகும்.

அமெரிக்க எல்லை
இந்த அமெரிக்க எல்லையில்தான் அந்த துயரம் நடந்துள்ளது.. 2 பெரியவர்கள், ஒரு குழந்தையின் உடல் இங்கு முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.. இதனால் பதற்றமடைந்து, அந்த பகுதியின் எல்லை பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. அப்போது மேலும் ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.. இது தொடர்பான விசாரணையையும் கனடா போலீசார் மேற்கொண்டனர்.. இறுதியில் அந்த 4 பேருமே கடுமையான குளிர் காரணமாக உறைந்தே இறந்து போனதாக அறிக்கையில் தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணை
அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.. மனிடோபா மாகாணத்தில் இருந்து அமெரிக்காவிற்குள் அவர்கள் நுழைய முயன்றதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கருதப்படுகிறது... அவர்களை வேனில் அடைத்து வைத்து அமெரிக்காவுக்கு கடத்த முயன்றுள்ளனர்.. இவர்களுக்கு மனித கடத்தல் கும்பல் என்றே பெயர்.. அந்த கும்பலில் உள்ள ஸ்டீவ் ஷாண்ட் என்பவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கர்
எல்லையை எளிதாக கடந்து விடலாம் என்று நினைத்து கிளம்பிய அவர்கள் பனியில் சிக்கியிருக்கலாம் என்று கனடா போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.. எல்லைப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 35 டிகிரிக்கு கீழ் சென்று விட்ட நிலையில் பனியில் உறைந்தே அவர்கள் உயிரிழந்துள்ளதும் உறுதியாகி உள்ளது.. இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நடந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு இந்திய தூதர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எல்லைகள்
இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிடோபாவின் எமர்சன் அருகே, கனடா-அமெரிக்க எல்லையை கடக்க முயன்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது... அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications