வரியை வாரி கொட்டிய டிரம்ப்.. பதிலடி கொடுக்க போவதில்லை.. சமாதானமாக செல்ல இந்தியா முடிவு?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிற்கு எதிராக வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இன்று முதல் அந்த வரிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால் இந்தியா இதற்கு பதிலடி வரிகள் எதையும் விதிக்காது, இந்தியா இப்போதைக்கு வலுவான பதிலடி எதுவும் கொடுக்காது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கிய சர்வதேச நிகழ்வாகும்.இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு உடனடியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு நலன் கருதி அமைதி உடன்பாட்டிற்கு இந்தியா தயாராக உள்ளது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் இந்தியா வரி விதிப்பு
இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரத்தை தாங்களே அழித்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் உலகிலேயே மிக அதிகமாக உள்ளன. அதேபோன்று, ரஷ்யாவுடனும் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் வர்த்தகம் இல்லை. ஆகவே, இப்போது இருப்பது இப்படியே இருக்கட்டும். ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடேவ் இன்னும் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர் ஆபத்தான பாதையில் செல்கிறார்.. இந்தியா, ரஷ்யா இரண்டு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது.. ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருந்தபோதிலும், அதிகப்படியான வரிகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக இரு நாடுகளுக்குமான வர்த்தகம் குறைவாகவே உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். மேலும் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ராணுவ தளவாடத் தேவைகளில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் போக்கை உலக நாடுகள் கண்டித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இது இந்தியாவுக்கு விதிக்கப்படும் அபராதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமாதானமாக செல்லும் இந்தியா - எதிர்ப்பு இல்லை?
இந்த அறிவிப்பு குறித்து, இந்திய அரசு எந்தவிதமான பதிலும் அளிக்காது என்றும், பேச்சுவார்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளின் நலன் கருதி ஒரு உடன்பாட்டிற்கு வர இந்தியா தயாராக உள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால், எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கப் பொருட்கள் இந்திய சந்தையில் எளிதாக நுழைய வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சில நிபுணர்கள் இந்த அமெரிக்க நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாலும், இந்திய அரசு இதுகுறித்து அதிகம் கவலைப்படவில்லை. 1998ல் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளின் போது, பல்வேறு தடைகளை எதிர்கொண்டது. அப்போது இந்தியாவின் பொருளாதாரம் சிறியதாக இருந்தது. இன்று, இந்தியா ஒரு தன்னிறைவு பெற்ற பொருளாதார சக்தியாக உள்ளது. எனவே, இப்போது ஏன் கவலைப்பட வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் கடுமையான பதிலடி கொடுத்து மோதலை அதிகரிப்பதற்கு பதிலாக இப்போதைக்கு சமாதானம் செய்வதற்கான பணிகளை இந்தியா கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications