வேலைக்கே போகாமல் இந்தியருக்கு 90 லட்சம் சம்பளம்.. அமெரிக்காவையே ஆடிப்போக வைத்த 'கோஸ்ட் எம்ப்ளாயி'
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஆப்டம் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கரன் குப்தா என்பவர் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தன் நண்பர் ஒருவரின் பெயரை அந்நிறுவன பணியாளர் லிஸ்டில் நுழைத்து, ஆண்டுக்கு ரூ. 90 லட்சம் சம்பளம் கொடுத்து வந்ததும் அதில் ரூ.45 லட்சத்தை கரன் கமிஷனாக பெற்றதும் அம்பலமாகி உள்ளது. 'கோஸ்ட் எம்ப்ளாயி' என்று அழைக்கப்படும் இந்த மோசடிக்கு காரணமாக இந்திய வம்சாவளி அதிகாரி இனி சிறையில் தான் பல நாட்கள் வாழ போகிறார்.
அமெரிக்காவின் முன்னணி சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்டம் நிறுவனத்தில் நடந்த இந்தச் சம்பவம் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்காவில்'கோஸ்ட் எம்ப்ளாய்' என்ற வகை மோசடி அரங்கேறி உள்ளது. வேலைக்கே வராத ஒரு நபரைப் பணியில் இருப்பதாகக் காட்டி, ஒரு சீனியர் அதிகாரி செய்த இந்த நூதன மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

கரன் குப்தா
அமெரிக்காவின் முன்னணி சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்டம் நிறுவனத்தில் கரன் குப்தா என்பவர் சீனியர் டைரக்டர் என்ற மிக உயரிய பதவியில் இருந்து வந்தார். இவருடைய ஆண்டுச் சம்பளம் மட்டும் சுமார் $275,000 க்கும் மேல் இருந்தது. இந்திய மதிப்பில் ₹2.31 கோடிக்கு மேல் வழங்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும், புதிய பணியாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரமும் கரன் குப்தாவிடம் தான் இருந்தது.
மோசடி எப்படி நடந்தது
ஆப்டம் நிறுவனத்தில் கரன் குப்தா சீனியர் டைரக்டர் என்பதால் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு எடுக்கலாம் அல்லது நீக்கலாம் என்ற அதிகாரம் உள்ளதால், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, கரன் குப்தா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டியிருக்கிறார். தனது நெருங்கிய நண்பர் ஒருவரை (அவர் உண்மையில் அந்த நிறுவத்தில் வேலையைச் செய்யவில்லை) நிறுவனத்தின் பணியாளர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
சம்பளம் மற்றும் கமிஷன் எப்படி பரிமாற்றம் நடந்தது
கரன் குப்தா அந்த நண்பருக்கு ஆண்டுக்கு சுமார் ₹90 லட்சம் ($110,000) சம்பளம் நிர்ணயித்துள்ளார். ஒப்பந்தப்படி, அந்தச் சம்பளத்தில் பாதியை (சுமார் ₹45 லட்சம்) கரன் குப்தா கமிஷனாகத் தனது பாக்கெட்டில் போட்டு வந்துள்ளார். இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், வேலையே செய்யாத அந்த 'கோஸ்ட்' பணியாளருக்கு, கரன் குப்தாவே 'சிறந்த பணியாளர்' என மதிப்பீடு செய்துள்ளார். ஆண்டு தோறும் அப்ரைஸல் வழங்கி, சம்பள உயர்வும், போனஸும் பெற்றுத் தந்து வந்துள்ளார்.
மோசடி அம்பலமானது எப்படி?
நான்கு ஆண்டுகளாகச் சத்தமில்லாமல் நடந்த இந்த ஊழல், சமீபத்தில் நிறுவனத்தின் உள் தணிக்கையின் போது அம்பலமானது. நம்மூரில் அப்ரைசரை கைக்குள் போட்டுக்கொண்டு வங்கி அதிகாரிகள் எப்படி போலி நகையை அடகு வைத்து கடன் பெறுகிறார்களோ அப்படி நடந்த மோசடி தான்.. ஆனால் நம்மூர் வங்கிகள் எப்படி அவ்வபோது ஆடிட்டிங் செய்வார்களோ, அதுபோன்ற தணிக்கை 4 வருடம் கழித்து நடந்துள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி..அதுதான் நடந்துள்ளது.
கரன் குப்தாவின் நண்பரான அந் பணியாளர் எந்தவொரு 'மீட்டிங்'கிலும் கலந்துகொள்ளாதது, லாகின் விவரங்கள் இல்லாதது மற்றும் எந்தவொரு புராஜெக்ட்டிலும் பங்களிக்காதது அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை அதிகரித்தது. தீவிர விசாரணையில், கரன் குப்தாவிற்கும் அந்த நபருக்கும் இடையே இருந்த பணப்பரிமாற்றங்கள் மற்றும் போலி ஆவணங்கள் சிக்கின.
நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டவுடன், ஆப்டம் நிறுவனம் கரன் குப்தா மற்றும் அந்தப் போலிப் பணியாளர் இருவரும் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். 2.30 கோடி சம்பளம் வாங்கி கொண்டிருந்த கரன் குப்தா இப்போது தனது எதிர்காலத்தையே இழந்துள்ளார். இதனிடையே நிறுவனம் இழந்த பணத்தைத் திரும்பப் பெறவும், கரன் குப்தா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்ட ரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
சிறையில் தான் இனி வாழ்க்கை
இந்தச் சம்பவம் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளதாகக் கருதிய ஆப்டம் நிர்வாகம், பணியாளர் சேர்க்கை மற்றும் தணிக்கை முறைகளை இன்னும் கடுமையாக்கியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற 'கோஸ்ட் எம்ப்ளாயி' மோசடிகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை. கரன் குப்தா இனி பல நாட்களை சிறையில் தான் கழிக்க வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications