ஜோ பிடன் மகனுக்கு சீனா கொடுத்த 1.5 பில்லியன்.. இந்தியாவுக்கு நல்லதில்லை.. ட்ரம்ப் மகன் எச்சரிக்கை
நியூயார்க்: ஜோ பிடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றால், அது இந்தியாவுக்கு நல்லதல்ல, சீனாவுக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகன், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் களமிறங்கியுள்ளார்.
74 வயதாகும் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக அவரது 42 வயதாகும் மகன், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் பிரச்சார களத்தில், களமிறங்கியுள்ளார்.

ஜோ பிடன் குடும்பம் ஊழல்?
ஜோ பிடன் குடும்பத்தினர் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறி லிபரல் பிரிவிலிஜ் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர். அந்த புத்தகத்துக்கு நிறைய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறி ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் கணிசமாக பங்கேற்றனர்.

சீனா ஆபத்தானது
நியூயார்க் நகரத்தின் லாங் ஐஸ்லாந்து பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மகன் பேசியதை பாருங்கள்: சீனா எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். உலகில் வேறு எந்த நாட்டு மக்களை விடவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

1.5 பில்லியன் டாலர்
ஜோ பிடன் மகன் ஹன்டர் பிடனுக்கு சீனா 1.5 பில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது. அவர் ஒரு சிறந்த தொழிலதிபர் என்பது மட்டும் கிடையாது. ஜோ பிடன் குடும்பத்தை விலைக்கு வாங்க முடியும் என சீனா நம்புகிறது. இதன் மூலம் சீனா மீது மென்மையான அணுகுமுறையை அமெரிக்கா கடைபிடிக்கும் என்று சீனா நம்புகிறது.

இந்தியாவுக்கு பின்னடைவு
எனவே ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அது, இந்தியாவுக்குத்தான் பின்னடைவு. ஜோ பிடன், குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அவர்கள் தரப்பு தெரிவிக்கவில்லை. சீனா மட்டும் கிடையாது, ரஷ்யா, உக்ரைன், என பலரும் ஜோ பிடன் குடும்பத்தை வாங்கிவிடுவார்கள்.

டொனால்ட் ட்ரம்ப் பேரணி
அமெரிக்க வாழ் இந்தியர்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவர்கள். இந்த சமுதாயத்தினர் பற்றி எனக்கு அதிகம் தெரியும். எனது தந்தை டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் அகமதாபாத் சென்றிருந்தபோது ஆற்றிய உரையை நினைவு கூறுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியுடன், டொனால்ட் ட்ரம்ப் சென்ற போது, பொதுமக்கள் எந்த அளவுக்கு உற்சாகமாக அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள் என்பதை பார்த்தேன். அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் பேரணிகளில் பிரமாண்டமாக நடைபெறுவதை பார்த்துள்ளேன். ஆனால், இந்தியாவில் அவ்வளவு பெரிய பேரணியை அப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தேன். இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் மகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications