அமெரிக்காவில் அரங்கேறிய பாரம்பரியம்.. தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ் விழா!
அமெரிக்காவில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தில் முத்தமிழ் விழா பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தில் முத்தமிழ் விழா பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு இருக்கிறது.
மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு வருடமும், முத்தமிழ் விழா கோடைவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10வது ஆண்டாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, முத்தமிழ் விழாவினை சிறப்பாக நடத்தியது.

தமிழகத்திலிருந்து கலைஞர்களான இராமச்சந்திரன்-நாகசுவரம், சிலம்பரசன்-தவில், சக்தி-பறை, கௌரி-சிலம்பம் கலைஞர்களை மினசோட்டா மாநிலக் கலைக்குழு(MSAB) மற்றும் முனைவர்.தாசு உதவியுடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அவர்களின் மூலம் மினசோட்டாவில் ஒரு மாத காலம் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. பறையை இசைத்த குழுவினருடன் பரதம் ஆடிக்காட்டிய நிகழ்வான "பறையுடன் பரதம்" அமெரிக்காவில் முதல் முறையாக மினசோட்டாவில் அரங்கேற்றப்பட்டது.

பரதம், பறை, கரகம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற தமிழர் கலைகளில் நடன அடைவைகளின் ஒற்றுமையை "அடைவைகளின் அணிவகுப்பாக" முதல் முறையாக ஒரே மேடையில் ஆடிக் காட்டியதைக் கண்டு, பார்வையாளர்கள் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தவில், நாகசுவரம், பறை, சிலம்பம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுடன் மேடையேறியதும் பலரை கவர்ந்தது.

பல்வேறு இசைக்கருவிகளுடன் தமிழ் இசைக் கருவியின் இசையை இசைத்த நிகழ்வும், கிராமியப் பாடல்கள் பாடிய நிகழ்வும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
தகவல், படம்: சுந்தரமூர்த்தி












Click it and Unblock the Notifications