2,480 கோடி கி.மீ தொலைவில்.. தொலைந்துபோன வாயேஜர் 1 விண்கலம்! கஷ்டப்பட்டு சிக்னலை மீட்ட நாசா
நியூயார்க்: பூமியை தாண்டி வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும் தேடினால் கிடைக்காது எதுவும் இல்லை என்கிற நம்பிக்கையுடன் மனிதன் அனுப்பிய வயேஜர் விண்கலம் தற்போது 2480 கோடி கி.மீ தொலைவில் உயிர்களை தேடி சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விண்கலத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுவிட்டது. பின்னர் நீண்ட நேரம் முயற்சிக்கு பிறகு மீண்டும் சிக்னல் கிடைத்திருக்கிறது.
உயிர்கள் என்பது மிகப்பெரிய அதிசயம். ஒவ்வொரு உயிர்களையும் உருவாக்கியுள்ள கோடிக்கணக்கான அணுக்களுக்கே கூட, உயிரை உருவாக்க வேண்டும் என்பதில் எந்த அக்கறையும் கிடையாது. அதாவது இந்த அணுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் உயிர் உருவாகும். அப்படி ஒன்று சேர வேண்டும் என்று அணுக்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. அப்படியெனில் உயிர்களாகிய நாம் மிகப்பெரிய அதிசயம். நம்மை போன்ற உயிர்கள் (ஏலியன்கள்) வேறு எங்கேனும் இருக்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்த ஏலியன்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில்தான் கடந்த 1977ம் ஆண்டு வாயேஜர் எனப்படும் ஒரு விண்கலத்தை மனிதன் விண்வெளிக்கு அனுப்பினான். இது 47 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வருகிறது. இதுவரை பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரத்தை போன்று சுமார் 165 மடங்கு தூரத்தை வாயேஜர் கடந்திருக்கிறது. இப்போதுவரை ஏலியன்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் நாம் கண்டுபிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு நம்பிக்கையுடன் பறந்துக்கொண்டிருக்கும் வாயேஜர்-1 விண்கலத்திலிருந்து திடீரென கடந்த 19ம் தேதி சிக்னல் கட்டாகிவிட்டது. இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சிக்னல் தடைக்கு காரணம் என்ன? விண்கல் மோதிவிட்டதா? அல்லது ஏலியன்கள் ஏதாவது இதை அழித்துவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுந்தது.
சிக்னலை மீட்டெடுக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடினர். வாயேஜர் விண்கலத்தை பொறுத்த வரை 10 கருவிகள் இருக்கின்றன. ஆனால் பேட்டரி பேக்-அப் வேண்டும் என்பதற்காக வெறும் 4 கருவிகள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன. வாயேஜர் உயிருடன் இருக்கிறதா? என்பதை கண்டறிய தினமும் பூமியிலிருந்து ஒரு சிக்னல் அனுப்பப்படும். இதை வாயேஜர் வாங்கி, திரும்ப அனுப்பும். இது நடக்க 46 மணி நேரம் வரை ஆகும்.
இப்படி இருக்கையில், வாயேஜர் 1-ன் சிக்னல் அனுப்பும் முறையை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்தனர். அதாவது S-பேண்ட் எனப்படும் இரண்டாம் நிலை டிரான்ஸ்மிட்டருக்கு மாற்றி அமைத்தனர். இந்த முறை சிக்னல் பரிமாற்றத்தை கடந்த 1981ம் ஆண்டே நாசா விஞ்ஞானிகள் நிறுத்திவிட்டனர். இருப்பினும் தற்போது புதியதாக திட்டமிட்டு மீண்டும் மாற்று சிக்னல் முறை முயற்சிக்கப்பட்டது. ஆனால் இதில் போதுமான அளவுக்கு பலமான சிக்னல் கிடைக்கவில்லை.
எனவே வாயேஜர் 1 உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பதறிய விஞ்ஞானிகள், உடனடியாக சிக்னலை மீட்டுக்கும் முயற்சியில் இறங்கினர். அக்டோபர் 22 அன்று, எஸ்-பேண்ட் டிரான்ஸ்மிட்டரின் செயல்பாட்டைச் சரிபார்க்க ஒரு மெசேஜை விஞ்ஞானிகள் அனுப்பினர். இதற்கு வாயேஜர் 1 பதிலளித்திருக்கிறது. இப்படியாக 47 ஆண்டு பழமையான செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் மீட்டெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications