டொனால்ட் டிரம்புக்கு தங்க பேஜர் வழங்கிய இஸ்ரேல் பிரதமர்! இதுக்குதானா?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த நெதன்யாகு, தங்க பேஜரை கிஃப்ட் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு லெபனானில் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நினைவுகூரும் வகையில் பேஜர் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
உலகம் முழுவதும் இருந்து இந்த பேஜர் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்திருந்தன. இருப்பினும், அதை பெருமையாக கருதி, டிரம்புக்கு தங்க பேஜரை பரிசாக நெதன்யாகு கொடுத்திருப்பது பாலஸ்தீன ஆதரவாளர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

பரிசாக கொடுக்கப்பட்ட பேஜருக்கு கீழே, "அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, சிறந்த நண்பரும், கூட்டாளியுமான பெஞ்சமின் நெதன்யாகு வழங்கும் பரிசு" என எழுதப்பட்டிருக்கிறது. இதனை வாங்கிக்கொண்ட டிரம்ப், "அது ஒரு பெரிய ஆப்ரேஷன்" என்று கூறியதாக அசோசியேட் பிரஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த சம்பவம் நடந்தது. அதாவது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள், தகவல் பரிமாற்றத்திற்கு பேஜர்களை பயன்படுத்தி வந்தன. சரியாக 17ம் தேதி லெபனானில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பேஜர்களும் சரமாரியாக வெடிக்க தொடங்கின. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்குள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கையும், காலும் துண்டானது. இது குறித்து விசாரணை நடத்த ஹிஸ்புல்லா அமைப்பு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அடுத்த நாள். அதாவது செப்.18ம் தேதி லெபனானில் பயன்பாட்டில் இருந்த அனைத்து வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறின. பேஜர் ஏற்படுத்திய பாதிப்பை விடவும், வாக்கி டாக்கி ஏற்படுத்திய பாதிப்புதான் அதிகமாக இருந்தது. மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். 3400க்கும் அதிகமானோருக்கு கையும், காலும் துண்டானது. ஹிஸ்புல்லா தரப்பு இப்படி ஒரு தாக்குதலை இதற்கு முன்னர் எதிர்கொண்டது கிடையாது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், நெதன்யாகு இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
இப்படி இருக்கையில்தான் டிரம்புக்கு தங்க பேஜர் பரிசளித்ததன் மூலம், தாக்குதலுக்கு காரணம் அவர்கள்தான் என்று நெதன்யாகு உறுதி செய்திருக்கிறார் என பாலஸ்தீன ஆதரவாளர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
பேஜர் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது?:
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில், அமெரிக்கா இஸ்ரேல் பக்கம் நின்றது. ஆயுதங்களை கொடுத்து உதவியையும் செய்தது. மறுபுறம் ஹிஸ்புல்லா எனும் ஆயுதம் தாங்கிய ஈரான் ஆதரவுக்குழு, பாலஸ்தீனத்திற்கு சப்போர்ட் செய்தது. லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வந்தது. உள்ளே ஹமாஸ், வெளியே ஹிஸ்புல்லா என்றுதான் தாக்குதல் இருந்தது. இரண்டையும் ஒரு கட்டத்திற்கு மேல் இஸ்ரேலால் சமாளிக்க முடியவில்லை.
இந்த சூழலில்தான் சைபர் தாக்குதலை தொடுத்தது. சைபர் தாக்குதலில்தான் பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறின. இதற்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் சப்போர்ட் இருந்தது என்று சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகளும் குற்றம்சாட்டியிருந்தன. ஆனால் அமெரிக்கா இதைப்பற்றி கொஞ்சம் கூட வாய் திறக்கவில்லை.
இன்று நெதன்யாகு கொடுத்த தங்க பேஜரை டிரம்ப் சிரித்துக்கொண்டே வாங்கியிருக்கிறார். மட்டுமல்லாது அன்று நடந்த தாக்குதல் குறித்தும் நினைவு கூர்ந்திருக்கிறார். இவையெல்லாம், பேஜர் தாக்குதலுக்கு காரணம் அமெரிக்காதான் என்பதை உறுதி செய்திருப்பதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications