திகார் சிறையில் உள்ள உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய.. நியூயார்க் மேயர் மம்தானி!
நியூயார்க்: ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித், டெல்லி கலவர வழக்கில் சுமார் 1,500 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு நியூயார்க் மேயராக பொறுப்பேற்றிருக்கும் ஜோஹ்ரான் மம்தானி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி கலவர வழக்கில் உபா சட்டத்தின் கீழ் உமர் காலித் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் ஆன பின்னரும் அவரது வழக்கில் இன்னும் விசாரணை முழுமையாக நடக்கவில்லை.

குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஒருவர் குற்றவாளி கிடையாது என்பதுதான் நீதித்துறையின் வழக்கம். ஆனால், உபா வழக்கில் அப்படி கிடையாது. சந்தேகம் என்று இருந்தாலே அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார். இந்த வழக்கில் எளிதில் ஜாமின் கிடைக்காது. உபா சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த சட்டம் குறித்து உச்சநீதிமன்றமே சமீபத்தில் சில வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறது. அதாவது விசாரணை முடியும் வரை ஒருவர் சிறையிலேய இருப்பது என்பது அரசியலமைப்பு அவருக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை மீறுவதாகும் என்று கூறியிருக்கிறது.
இப்படியெல்லாம் சொன்னாலும் கூட, உமர் காலித் இன்னும் பிணையில் விடுக்கப்படாமல்தான் இருக்கிறார். இந்த நிலையில்தான், அவருக்கு மம்தானி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அன்புள்ள உமர், கசப்புணர்வைப் பற்றிய உங்களின் வார்த்தைகளையும், அது ஒருவரை அழித்துவிடக் கூடாது என்பது குறித்தும் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். உங்களின் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
உமர் காலித்துக்கு மம்தானி ஆதரவு தெரிவிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உமர் காலித்தின் சிறை நாட்குறிப்புகளை மம்தானி வாசித்து காட்டியிருந்தார்.
நியூயார்க் மேயராக பொறுப்பேற்ற பின்னர், தன் கைப்பட முதல் முறையாக உமர் காலித்துக்கு மம்தானி கடிதம் எழுதியிருப்பது சர்வதேச அளவில் உபா சட்டம் குறித்தும், உமர் காலித் விவகாரம் குறித்தும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications