எச்சரித்த ஈரான்.. அப்படியே நழுவிக்கொண்ட அமெரிக்கா! பதில் தாக்குதலை கைவிட இதுதான் காரணம்
நியூயார்க்: ஈரானின் தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்காது என்று அந்நாட்டு அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருக்கிறது.

நேற்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99%-ஐ இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இஸ்ரேல் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியிருக்கிறது. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இதனை ஜோ பைடன் மறுத்திருக்கிறார்.
"ஈரான் மீது அமெரிக்கா எந்த பதில் தாக்குதலையும் நடத்தாது" என்று வெளிப்படையாகவே அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. தனது தாக்குதல் குறித்து விளக்கிய ஈரான் "எங்கள் நிலத்தின் மீதும், எங்கள் பாதுகாப்புப்படை மீதும் தாக்குதல் நடத்துவோர் மீது பதில் தாக்குதல் நடத்துவது சட்டப்பூர்வமானதுதான். சட்டப்பூர்வ பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவு இதை உறுதி செய்கிறது" என்று கூறியிருந்தது.
நேற்று நடந்த அவசர ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும், ஈரான் தரப்பிலிருந்து இதே பாயிண்ட்தான் முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்துவது என்பது சட்டவிரோதமானது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக அமெரிக்காவுக்கு தெரியும். எனவே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று பைடன் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். மட்டுமல்லாது இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் "நீயாச்சு, உன் நாடாச்சு என நாங்கள் விலகிக்கொள்வோம்" எனவும் அமெரிக்கா கூறிவிட்டது.
இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கிறது. 99 சதவிகித ஏவுகணைகளை அது அழித்திருக்கிறது. எனவே பதில் தாக்குதல் அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
எப்படி இருப்பினும், தங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் விலகியே இருக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரித்திருந்தது. இதனை ஏற்று அமெரிக்கா விலகி இருப்பது உலக அமைதிக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications