ரஷ்யா- உக்ரைன் யுத்த விவகாரத்தில் அமைதியின் பக்கம் இந்தியா: ஐநாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்யா யுத்த விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
Recommended Video
ஐ.நா.வின் 77-வது பொதுச்சபைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம்? என்பது அடிக்கடி எழுப்பப்படுகிற கேள்வி. இந்தியாவைப் பொறுத்தவரையில் அமைதியின் பக்கம் நிற்கிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஐநாவின் அடிப்படையான கொள்கை, குறிக்கோள்களின் பக்கம் இந்தியா எப்போதும் நிற்கும்.

இந்தியா பல சகாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் யாரும் நியாயப்படுத்தவும் முடியாது. என்னதான் புனிதமான நோக்கம் என்றாலும் அதை ரத்தம் தோய்ந்த கரங்களைக் கொண்டு பாதுகாக்க முடியாது.
பயங்கரவாத விவகாரங்களில் ஐநாவின் தடைகளை அரசியலாக்குகிற நாடுகளும் உள்ளன; ஐநாவால் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாக்கிற நாடுகளும் இருக்கின்றன. இத்தகைய போக்குகளால் அந்த நாடுகளுக்கு எவ்வித பயனும் ஏற்படாது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
முன்னதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, ரஷ்யா அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் மீதான யுத்தம் வேண்டாம் என்று பிரதமர் மோடி, புதினிடம் வலியுறுத்தி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்து சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications