"சீனா கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை!" அடுத்து இந்தியா குறித்து இலங்கை அமைச்சர் சொன்ன முக்கிய மேட்டர்
நியூயார்க்: இலங்கையில் சீன கப்பலை நிறுத்த எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி, இந்தியா குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கை துறைமுகத்தில் சீனா தனது ராணுவ கப்பலை நிறுத்த உள்ளதாகவும் இதற்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஷி யான் 6 என்ற சீன கப்பல் வரும் அக். மாதம் இலங்கையில் நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்,
இலங்கை அமைச்சர்: இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இது குறித்து பல காலமாகவே பேசி வருகிறோம். இந்தியா முன்பே இது குறித்த தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆனால் நாங்கள் முறையான standard operating procedureஐ பின்பற்றுவோம். இந்தியா உட்பட பல நட்பு நாடுகளிடம் இது குறித்து ஆலோசித்துள்ளோம். அவர்கள் உரிய SOPஐ பின்பற்றும் வரை பிரச்சினை இல்லை. அவர்கள் SOP பின்பற்றவில்லை என்றால் தான் பிரச்சினை.
அனுமதி தரவில்லை: ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். இதுவரை சீனக் கப்பலான ஷி யான் 6ஐ இலங்கையில் நிறுத்த அனுமதி தரவில்லை. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் கருத்துக்கள் எங்களுக்கு மிக மிக முக்கியம். நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்கவே விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
சீன கப்பலுக்கு இன்னும் அனுமதி தரவில்லை என்று அமைச்சர் கூறினாலும் விரைவில் இதற்கு அனுமதி தரப்படும் என்றே தெரிகிறது. வெளிநாட்டுக் கப்பல்களுக்காகத் தனியாக ஒரு புரோட்டோகாலை உருவாக்க உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும் கவலை: சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 வரும் அக். மாதம் இலங்கைக்கு வரும் என்றும் அப்போது அவர்கள் இலங்கையில் உள்ள தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் இது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-5 கப்பலும் இதேபோல சீனாவில் நிறுத்தப்பட்டது. அதுவும் இந்தியா முக்கிய ராக்கெட் பரிசோதனையை செய்யும் சமயத்தில் சரியாக இந்த கப்பலை நிறுத்தினார்கள். இதற்கு அப்போதே இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு கடல் படுக்கையை வரைபடமாக்கலாம் என்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா தொடர்ச்சியாக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அமைச்சரின் இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications