அமெரிக்க அதிபர் தேர்தல்.. விண்வெளியிலிருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்தலில் பூமியலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விண்வெளி வீரர்கள் வாக்களித்துள்ளனர்.
மனிதர்களின் தோற்றம், வளர்ச்சி, பூமியின் உருவாக்கம் அதன் முடிவு என பல்வேறு கேள்விகளுக்கான விடையாக விண்வெளி இருக்கிறது. விண்வெளியை ஆய்வு செய்வதன் மூலம் மனித குலம் தேடும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். எனவேதான் கோடிக்கணக்கில் செலவு செய்து விண்வெளி வீரர்களை உலக நாடுகள் விண்வெளிக்கு அனுப்புகின்றன. இப்படி விண்வெளிக்கு போனவர்களில் சுனிதா வில்லியம்ஸும் ஒருவர். இந்திய வம்சாவளியான இவரும், புட்ச் வில்மோர் எனும் விண்வெளி வீரரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றனர்.

7 நாட்கள்தான் விண்வெளியில் தங்குவார்கள், பின்னர் பூமிக்கு திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்ப முடியவில்லை. ஒரு வாரம் என்பது, இரண்டு வாரமாக மாறியது. பின்னர் ஒரு மாதத்தில் பூமிக்கு திரும்பிவிடுவார்கள் என்று நாசா விளக்கமளித்தது. ஆனால் கடைசி வரை ஸ்டார்லைனர் விண்கலத்தில் உள்ள பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. எனவே, அவர்களை பூமிக்கு அழைத்து வர எலான் மஸ்கின் க்ரூ டிராகன் அனுப்பி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் விண்வெளிக்கு சென்றுவர, பல நூறு கோடி ரூபாய் செலவாகும். எனவே, நினைத்த உடன் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வந்துவிட முடியாது. ஆகையால் 2025ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மேலும் சில விண்வெளி வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என்று நாசா கூறியிருக்கிறது. எல்லாம் ஓகேதான். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் இப்போது அமெரிக்க நாட்டின் பிரஜை. எனவே அதிபர் தேர்தலில் அவர் ஓட்டு போட வேண்டுமே! பூமியில் இல்லாமல் எப்படி அவரால் வாக்களிக்க முடியும்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் நேற்றைய தேர்தலில் அவர் ஓட்டு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளி வீரர்கள், விண்வெளியிலிருந்து வாக்களிக்க அமெரிக்க அரசு சிறப்பான வழிமுறைகளை கையாள்கிறது. அதன்படி, விண்வெளியில் இருந்தவாறு வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் தங்களது வாக்கு யாருக்கு என்பது குறித்து மெயில் அனுப்புவார்கள். அது நேராக விண்வெளி வீரர் குடியிருக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்லும். அங்கு மற்ற வாக்குகளுடன் இவரது வாக்கும் சேர்க்கப்படும். இப்படி அனுப்பப்படும் மெயிலை அவ்வளவு எளிதாக ஹேக் செய்துவிட முடியாது. இதற்காக பிரத்யேக வழிமுறையை நாசாவும், அந்நாட்டு தேர்தல் ஆணையமும் கையாள்கிறது.
விண்வெளியிலிருந்து வாக்களிக்கும் முறை கடந்த 1997லிலிருந்து அமெரிக்கா பின்பற்றி வருகிறது. டேவிட் உல்ஃப் எனும் அமெரிக்க விண்வெளி வீரர்தான் விண்வெளியிலிருந்து முதன் முறையாக வாக்களித்தார். நேற்று சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 விண்வெளி வீரர்களும் விண்வெளியிலிருந்து வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications